மின் இணைப்பு தர ரூ.10,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு சிறை
சிவகங்கை: கம்பெனிக்கு மின் இணைப்பு கொடுப்பதற்கு ரூ.10,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரைச் சேர்ந்த முருகசாமி என்பவர் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா டி.கரிசல்குளம் கிராமத்தில் ஸ்பிளண்டர் பிராஸஸ்'' என்ற பெயரில் பிளீச்சிங் கம்பெனி அமைக்க அனுமதி பெற்றார்.
இதனையடுத்து அந்த நிறுவனத்திற்கு மின் இணைப்பை பெற கடந்த ஆகஸ்டு மாதம் மானாமதுரை தாலுகா, கீழடி கிராமத்தில் உள்ள இளநிலை பொறியாளர் மீனாட்சிசுந்தரதை சந்தித்து மனு கொடுத்துள்ளார். ஆனால் மீனாட்சிசுந்தரம் மின் இணைப்பு கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.
இதையடுத்து முருகசாமி மீனாட்சிசுந்தரத்தை சந்தித்து இது குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர் ரூ.10,000 லஞ்சமாக கொடுத்தால் உடனே மின் இணைப்பு கொடுப்பதாக கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகசாமி இது குறித்து சிவகங்கை ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் ராஜாவிடம் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில் மதுரை, திருப்பரங்குன்றம் ரோட்டில் உள்ள விஜய் லாட்ஜில் தங்கி இருந்த மீனாட்சிசுந்தரத்திடம் முருகசாமி லஞ்ச பணம் ரூ.10,000 கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மீனாட்சி சுந்தரத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிவகங்கை கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.
இதனையடுத்து செல்லூரில் உள்ள அவரது வீடு, கீழடியில் உள்ள மின் அலுவலகம் ஆகியவற்றை சோதனை செய்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.