தமிழக காங்கிரஸ் தலைவராக வாசன் ஆதரவாளர் ஞானதேசிகன் நியமனம்-அதிமுக கூட்டணிக்கு உதவுவார்

புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஞானதேசிகன் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
கடந்த மக்களவைத் தேர்தலை ஒட்டி, தமிழக காங்கிரஸ் தலைவராக தங்கபாலு நியமிக்கப்பட்டார். ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததை அடுத்து, மே 14ம் தேதி தங்கபாலு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஆனால், இந்தப் பதவியைப் பிடிக்க இளங்கோவனில் ஆரம்பித்து, மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் ஆதரவாளரான கே.எஸ். அழகிரி உள்பட பல குட்டித் தலைவர்களும் கடும் போட்டியில் இறங்கியதால், தங்கபாலுவையே அந்தப் பொறுப்பில் நீடிக்க விட்டது காங்கிரஸ் தலைவர்.
ஒரு வழியாக 6 மாதங்களுக்குப் பின் புதிய தலைவரை காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது. இவர் தலைவராக்கப்பட்டன் மூலம் ஜி.கே.வாசனின் கை ஓங்கியுள்ளது.
ஸ்ரீவில்லிப்பூத்தூரைச் சேர்ந்த இவர், பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றியவர். மறைந்த காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின் ஆதரவாளராக இருந்தவர். அவரது மறைவையடுத்து வாசனுக்கு மிக விசுவாசமாக இருந்து வருபவர்.
காங்கிரசிலிருந்து விலகி மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது இவரும் அந்தக் கட்சியில் இணைந்தார். 2001ம் ஆண்டு முதல் ராஜ்யசபா எம்பியாக உள்ளார். பாதுகாப்பு, நிதி, உள்துறை, தொழிலாளர் நலம், ரசாயனம் மற்றும் உரம் ஆகிய துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராகப் பணியாற்றிய ஞானதேசிகன் அனைத்து கோஷ்டிகளுக்கும் பதவிகளைப் பகிர்ந்தளித்து, அங்கு கட்சித் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்து சோனியாவிடம் நல்ல பெயர் வாங்கினார்.
மேலும் தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் சோனியாவை சந்தித்த இவர், உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்று உண்மையைச் சொன்னதோடு, ஆனால், தனித்துப் போட்டியிடுவதால் கட்சியினர் உற்சாகமாகப் பணியாற்றினர் என்றும் கூறிவிட்டு வந்தார். இந் நிலையில் அவருக்கு வாசனின் தீவிர பரிந்துரையில் இந்தப் பதவியை அளித்துள்ளார் சோனியா.
புதிய தலைவராக நியமிக்கப்பட்டது குறித்து ஞானதேசிகன் கூறுகையில், கட்சியின் மூத்த தலைவர்களின் எதிர்பார்ப்பு வீணாகாத வகையில் செயல்படுவேன். தமிழக காங்கிரஸ் கட்சியில் எந்தவித பாகுபாடுமின்றி அனைவரையும் ஒன்றிணைத்து செயல்படுவேன் என்றார்.
முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவிடமும் இவருக்கு நல்ல பெயர் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் தேவைப்பட்டால் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான முயற்சிகளைத் தொடங்க ஞானதேசிகன் பொறுத்தமான நபராக இருப்பார் என்று கருதியே அவரை சோனியா நியமித்துள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications