விண்ணைத் தொடும் கட்டுமானப் பொருட்கள் விலை: கிடப்பில் அரசு பணிகள்- கவலையில் அதிகாரிகள்
நெல்லை: தமிழகத்தில் மணல், செங்கல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளதால் பல அரசு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. புதிய பணிகளை எடுக்கவும் கான்டிராக்டர்கள் தயங்குகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த சில ஆண்டுகளாக அரசு வளர்ச்சிப் பணிகள் மட்டுமின்றி தனியார் கட்டிடப் பணிகளும் அதிக அளவு நடைபெற்று வருகிறது. தனியார் கட்டிட பணிகள் மேற்கொள்ளும் கான்டிராக்டர்கள் மணல், ஜல்லி, சிமெண்ட், செங்கல், கம்பி போன்ற பொருட்களின் மார்க்கெட் விலையையொட்டி கட்டுபடியான ரேட்டில் பணிகள் மேற்கொள்வதால் தனியார் கான்டிராக்டர்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் அரசு கட்டிடப் பணிகளை மேற்கொள்ளும் கான்டிராக்டர்கள் கட்டுமானப் பொருட்களின் திடீர் விலையேற்றத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டிடப் பணிகளை மேற்கொள்ள அரசு நிர்ணயித்த விலைக்கும், வெளிமார்க்கெட் விலைக்கும் கடும் வித்தியாசம் இருப்பதால் பல அரசு கட்டிடப் பணிகளை மேற்கொள்ளும் கான்டிராக்டர்கள் கடும் நஷ்டத்துக்குள்ளாகி வருகின்றனர். உதாரணமாக செங்கல் ஒன்று தற்போது ரூ.7 வரை விற்பனையாகும் நிலையில் அரசு ரூ.2.80 நிர்ணயம் செய்துள்ளது.
அதுபோல ஒரு யூனிட் மணல் வெளிமார்க்கெட்டில் ரூ.4,500ல் இருந்து ரூ.5000 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில் அரசு ரூ.1000 நிர்ணயித்துள்ளது. இது தவிர சிமெண்ட் வெளிமார்க்கெட்டில் ரூ. 295க்கு விற்கும் நிலையில் அரசு ரூ.245 நிர்ணயம் செய்துள்ளது. இதே போல கம்பி, ஜல்லி உள்ளிட்ட அனைத்து கட்டுமானப் பொருட்களின் வெளிமார்க்கெட் விலைக்கும், அரசு நிர்ணயித்த விலைக்கும் தொடர்பே இல்லாத சூழ்நிலை உள்ளது.
இதனால் பல பணிகள் பாதிக்கப்பட்டு துவக்க நிலையிலேயே நிற்கிறது. மாவட்டத்தில் பல பணிகள் அரையும், குறையுமாக உள்ளதாக கூறப்படுகிறது. பல அரசு பணிகள் கிடப்பில் போடப்பட்ட நிலையில் பல புதிய பணிகளை மேற்கொள்ள கான்டிராக்டர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
பல முறை நாளிதழ்களில் டெண்டர் விளம்பரம் வெளியிடப்பட்டும் முக்கிய கட்டிடப் பணிகளை மேற்கொள்ள கான்டிராக்டர்கள் முன்வருவதில்லை என அதிகாரிகள் புலம்புகின்றனர். எனவே, கட்டுமானப் பொருட்களின் மார்க்கெட் விலையை அனுசரித்து அரசு பணிகளுக்கு மதிப்பீடு தயார் செய்ய வேண்டும். அப்போது தான் அரசு பணிகள் விரைவாகவும், தரமாகவும் நடைபெறும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications