இலங்கை கடற்படை வெறித் தாக்குதல்-மீனவர் மண்டை உடைந்தது-படகுகள் சேதம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச்சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீன்களையும் பறித்துச் சென்றுள்ளனர். தாக்குதலில் மீனவர் ஒருவரின் மண்டை உடைந்தது. படகுகளும் சேதமடைந்துள்ளன.
ராமேஸ்வரத்தில் இருந்து 650 க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் திங்கட்கிழமை அதிகாலை மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். தனுஷ்கோடிக்கும், கச்சத்தீவுக்கும் இடையே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 16க்கும் மேற்பட்ட அதிநவீன படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்கிவிட்டு அவர்களிடம் இருந்த மீன்களையும், வலைகள், கருவிகளையும் பறித்துச் சென்றனர்.
கடற்படை தாக்கியதில் செல்வராஜ் என்ற மீனவரின் மண்டை உடைந்தது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கரை திரும்பும் போது மீண்டும் வந்த இலங்கை கடற்படையினர், படகுகளின் மீது கற்களை வீசி சேதப்படுத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டனர்.
கரை திரும்பிய மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் மூர்க்கத்தனமான தாக்குதலினால் அதிர்ச்சியடைந்துள்ளனர். இலங்கை கடற்படையினர், மற்றும் மீனவர்களின் தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீனவர்களின் தாக்குதலினால் படுகாயமடைந்த செல்வராஜ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தினந்தோறும் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு மலேசியாவில் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பேசிய இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே,தமிழக மீனவர்கள் மனிதாபிமான முறையில் நடத்தப்படுவார்கள் என்று தெரிவித்த நிலையில் தற்போது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications