மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றியுள்ள விதிமீறிய கட்டிடங்களை இடிக்க கலெக்டர் நோட்டீஸ்

தமிழகத்தில் புகழ் பெற்ற கோவில்களில் மதுரை மீனாட்சி கோவிலும் ஒன்று. இந்த கோவிலை சுற்றியும், கோவில் கோபுரத்தை மறைக்கும் வகையிலும் பல்வேறு கட்டடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்படுள்ளன.
கோவிலைச் சுற்றி சுமார் ஒரு கி.மீ., சுற்றளவில் ஒன்பது மீட்டர் உயரத்துக்கு அதிகமாகக் கட்டடம் கட்ட கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்த உத்தரவு நாளடைவில் செயல்படுத்தப்படாமல் போனது. அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து விதிமுறைகளை மீறிய கட்டிங்களை இடிக்க சர்வே துவங்குவதும், பின்பு கைவிடுவதுமாக இருந்ததனர்.
இதனால் விதிமீறிய கட்டடங்கள் அதிக அளவில் உருவானது. இப்பிரச்னைக்கு தீர்வு காண பொது மக்களும், ஆன்மீக பெரியோர்களும் அரசுக்கு கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த பிரச்சனையில் மாவட்ட கலெக்டர் சகாயம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி விதிமீறிய கட்டடங்களின் எண்ணிக்கை, அவற்றின் விவரங்களைத் தெரிவிப்பதுடன், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி உள்ளூர் திட்டக் குழுமத்திற்கு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பினார்.
இதனையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி உள்ள மிக உயரமான கட்டடங்கள் குறித்த சர்வே எடுக்கும் பணி துவங்கியுள்ளது. இது குறித்த அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் அளித்த பின்பு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கும் பணி துவங்கும் என்று கூறப்படுகின்றது. மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்தின் இந்த அதிரடி நடவடிக்கை பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை தி.நகரில் விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்ட நடவடிக்கையைப் போல மதுரையிலும் கலெக்டர் களம் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications