நீதிபதியின் படத்தை தவறாக காட்டிய டைம்ஸ் நவ் டிவிக்கு ரூ.100 கோடி அபராதம்
மும்பை: பிஎப் ஊழல் முறைகேடு குறித்த செய்தியின்போது முன்னாள் நீதிபதி பி.பி.சாவந்த்தின் படத்தைத் தவறாக காட்டியதற்காக டைம்ஸ் நவ் டிவிக்கு ரூ. 100 கோடி அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பாம்பே உயர்நீதிமன்றம் விசாரித்து வரும் வழக்குக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால் டைம்ஸ் நவ் டிவி பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
நாட்டை உலுக்கிய பிஎப் பண ஊழல் விவகாரத்தில் பல்வேறு நீதிபதிகளுக்குத தொடர்பு இருப்பதாக கூறி டைம்ஸ் நவ் டிவி ஒரு செய்தியை ஒளிபரப்பியது. அப்போது தவறுதலாக அதில், சம்பந்தப்படாத முன்னாள் நீதிபதி பி.பி.சாவந்த்தின் படம் காட்டப்பட்டது. கிட்டத்தட்ட 15 விநாடிகள் அந்தப் படம் காட்டப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பி.பி.சாவந்த் டைம்ஸ் நவ் டிவிக்கு மன்னிப்பு கோரியும், ஐந்து நாட்களுக்கு தனது மன்னிப்பை தொடர்ந்து டிவி நிறுவனம் வெளியிட வேண்டும் என்று கோரியும் கடிதம் எழுதினார். ஆனால் அதை கண்டு கொள்ளவில்லை டைமஸ் நவ்.
இதையடுத்து புனே மாவட்ட கோர்ட்டில் நீதிபதி பி.பி.சாவந்த் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த கோர்ட் டைம்ஸ் நவ் டிவி ரூ. 100 கோடி அபராதம் செலுத்துமாறு அதிரடி உத்தரவிட்டது. இதை எதிர்த்து பாம்பே உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது டைம்ஸ் நவ்.
அதை விசாரித்த உயர்நீதிமன்றம் ரூ. 20 கோடி பணத்தை உடனடியாக டெபாசிட் செய்யுமாறும், மீதத் தொகைக்கு வங்கி உத்தரவாதத்தை அளிக்குமாறும் உத்தரவிட்டது.
இதையடுத்து டைம்ஸ் நவ் டிவி உச்சநீதிமன்றத்தை அணுகியது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று அது தனது மனுவில் கூறியிருந்தது. ஆனால், இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால் ரூ. 100 கோடி அபராதத்தை செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது டைம்ஸ் நவ் டிவி நிறுவனம்.












Click it and Unblock the Notifications