சாமி கேட்ட 2ஜி ஆவணங்களை நாளைக்குள் கொடுப்போம்-சிபிஐ
அப்போதைய தொலைத் தொடர்பு அமைச்சர் ராசாவுக்கும், அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் இடையிலான, 2ஜி விவகாரம் தொடர்பான கடிதப் பரிமாற்றம் உள்ளிட்டவற்றை தனக்கு சிபிஐ வழங்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் கோரியிருந்தார் சாமி. இதை ஏற்ற சிபிஐ கோர்ட், சாமி கேட்ட ஆவணங்களை வழங்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சாமி கூறுகையில், சிபிஐ எனக்கு இன்னும் நான் கேட்ட ஆவணங்களை வழங்கவில்லை என்று முறையிட்டார். இதையடுத்து நாளைக்குள் ஆவணங்களைத் தருவதாக சிபிஐ சார்பில் உறுதியளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று 2ஜி வழக்கின் இரண்டாவது சாட்சியிடம் குறுக்கு விசாரணை நடந்தது. ரிலையன்ஸ் அடாக் நிறுவனத்தின் குழுத் தலைவர் ஏ.என்.சேதுராமனிடம் குறுக்கு விசாணை நடத்தப்பட்டது.
ப.சிதம்பரத்தை சிக்க வைக்க சாமி கையில் துருப்புச் சீட்டு:
இந்தக் கடிதப் பரிவர்த்தனைகள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை 2ஜி வழக்கில் சிக்க வைக்கும் என சாமி திடமாக நம்புகிறார்.
அதில் உள்ள தகவல் பரிமாற்றங்கள் மூலம் ப.சிதம்பரத்திற்கும் இந்த ஊழலில் தொடர்பு உள்ளது நிரூபணமாகும் என்று சாமி கூறி வருகிறார்.
இதுகுறித்து சாமி கூறுகையில், சிபிஐ கோர்ட் எனது கருத்தை கவனத்துடன் ஏற்றுக் கொண்டது. நான் கேட்கும் ஆவணங்களை சிபிஐ தராமல் இருப்பதாக கூறிய புகாரையும் அது கவனத்தில் கொண்டது. தற்போது வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நான் கேட்ட ஆவணங்களைத் தருவதாக சிபிஐ கூறியுள்ளது.
அதை நான் தீவிரமாக படித்துப் பார்ப்பேன். அடுத்து விசாரணை கோர்ட்டுக்கு வரும்போது, அதாவது டிசம்பர் 3ம் தேதி இதுகுறித்து கோர்ட்டில் தெரிவிப்பேன் என்றார்.
இந்தக் கடிதப் பரிவர்த்தையில் ப.சிதம்பரத்திற்கு எதிரான ஆதாரங்கள் இருப்பதாக சாமி கூறுகிறார். குறிப்பாக, ஸ்வான் டெலிகாம் மற்றும் யுனிடெக் வயர்லஸ் ஆகிய நிறுவனங்கள், தங்களது பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களான எடிசலாத் மற்றும் டெலினார் ஆகிய நிறுவனங்களுக்கு மாற்றுமாறு ராசாவுக்குக் அனுமதி கொடுத்ததே ப.சிதம்பரம்தான் என்பது சாமியின் வாதமாகும்.
இந்த இரு வெளிநாட்டு நிறுவனங்களும் பல்வேறு கட்டங்களில் மத்திய உள்துறை அமைச்சகத்தால் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ குற்றச்சாட்டில், ஷாஹித் பல்வாவின் ஸ்வான் டெலிகாம் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை ரூ. 1537 கோடிக்கு வாங்கி, அதன் 45 சதவீத பங்குகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த எடிசலாத்துக்கு ரூ. 4200 கோடிக்கு விற்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல யுனிடெக் நிறுவனம் தனது 60 சதவீத பங்குகளை நார்வே நாட்டின் டெலினார் நிறுவனத்திற்கு ரூ. 6200 கோடிக்கு விற்று விட்டதாக தெரிவித்துள்ளது.