வேண்டாம் உதவி - மல்லையா பல்டி
பெங்களூர்: கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தைக் காப்பாற்றுமாறு தாம் அரசைக் கோரவில்லை என்றும், குறுகிய கால கடனாக ரூ 770 முதல் 800 கோடி வரை யாராவது கடனாகத் தரமுன்வந்தால் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்றும் விஜய் மல்லையா கூறியுள்ளார்.
கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு எந்த வித பெயில் அவுட்டும் இந்திய அரசோ, அரசுத்துறை வங்கிகளோ தரக்கூடாது என நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இப்போது திடீரென பல்டியடித்துள்ளார் மல்லையா.
இந்திய மது விற்பனையில் 80 சதவீதத்தை கட்டுப்படுத்தும் அளவு ஆதிக்கம் செலுத்துபவர் விஜய் மல்லையா என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் அணியின் உரிமையாளராகவும் உள்ளார். ரூ 4000 கோடி மதிப்பில் பெரும் அரண்மனை ஒன்றையும் கர்நாடகத்தில் இவர் கட்டி வருகிறார்.
அழகிகளின் அரைநிர்வாண காலண்டர் அடிப்பதற்கே பல கோடியைச் செலவிடும் விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் நிறுவனம், இதுவரை ஒரு ஆண்டு கூட இவரது கிங்ஃபிஷர் நிறுவனம் இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்துக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களை முறையாகச் செலுத்தவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே பலநூறு கோடி பாக்கியாக நிற்கிறது.
இப்படிப்பட்ட ஒரு தொழிலதிபருக்கும் அவரது முறையற்ற நிறுவனத்துக்கும் எதற்காக நிதியுதவி செய்ய வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரும் எழுப்பும் கேள்வி. மல்லையாவின் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தை மூட வேண்டும் அல்லது அரசுடைமை ஆக்க வேண்டும் என்று அனைவரும் கோரத் தொடங்கியுள்ளதால் ஷாக்காகிவிட்ட மல்லையா, இப்போது அரசு உதவி வேண்டாம், அன்னிய முதலீட்டை அனுமதியுங்கள் என்று கோர ஆரம்பித்துள்ளார்.
ஆனால் அன்னிய முதலீட்டை அனுமதித்தால் அது பல மோசடியான செயல்களுக்கு அடித்தளமாகிவிடும் என்பதால், அனுமதிக்க முடியாது என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications