கராச்சியில் தற்கொலைப் படை தாக்குதல்-2 போலீசார் உள்பட 5 பேர் பலி
கராச்சி: கராச்சியில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள், 2 போலீசார் உயிர் இழந்தனர்.
கராச்சியில் தீவிரவாதிகள் 3 பேர் நேற்றிரவு 10 மணி அளவில் வெடிகுண்டுகள் நிரப்பிய வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற வேனை போலீசார் நிறுத்துமாறு கூறியுள்ளனர். உடனே அவர்கள் வேனில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் வேனில் இருந்த 3 பேரும், 2 போலீசாரும் உயிர் இழந்தனர். சம்பவ இடத்தில் ஆயுதங்கள் கிடந்ததைப் பார்த்தோம். இறந்த தீவிரவாதிகளில் ஒருவனின் உடலில் தற்கொலைப் படையினர் அணியும் கவசம் இருந்தது என்று எஸ்பி தாரிக் தாரோஜோ தெரிவித்தார்.
வேனை நிறுத்தாமல் போனதால் போலீசார் இருவர் மோட்டார்சைக்கிளில் அவர்களை துரத்திச் சென்றுள்ளனர். அப்போது வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு பார்க் மற்றும் ரெஸ்டாரன்டிற்கு அருகில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. அவர்கள் ஒரு ஹோட்டலையோ அல்லது அப்பகுதியில் கண்காட்சி நடக்கவிருந்த இடத்தையோ தகர்க்க திட்டமிட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
ஆனால் வெடிகுண்டு நிரப்பிய வேனில் தீவிரவாதிகள் கராச்சியைத் தாக்கக்கூடும் என்று உளவுத் துறையினர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
வெடித்துச் சிதறிய வேனில் மீதமிருந்த பகுதிகளில் தற்கொலைப் படை அங்கிகள், கண்ணாடிகள், ஏகே 47 ரக துப்பாக்கிகள், விக்குகள், பர்தா ஆகியவை இருந்தன.
கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி இதே போன்று வெடிகுண்டு நிரப்பிய வேன் ஒன்று மூத்த போலீஸ் அதிகாரியின் வீட்டுக்குள் சென்று வெடித்ததில் 8 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications