கார்த்திகை மாதம் பிறந்தது: ஐயப்ப பக்தர்கள் விரதத்தைத் தொடங்கினர்
நெல்லை: கார்த்திகை மாதம் இன்று பிறந்ததையொட்டி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கியுள்ளனர். கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன.
தமிழ்க் கடவுள் முருகன் பிறந்த மாதம் கார்த்திகை. இது ஐயப்ப பக்தர்களுக்கும் புனித மாதமாகும். இந்த மாதத்தின் முதல் நாளில்தான் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குகின்றனர். கர்த்திகை மாதம் இன்று (17ம் தேதி) பிறந்தது. இதையொட்டி சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து பக்தர்கள் விரதம் தொடங்கினர். சபரிமலையில் நடைபெறும் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை விழாவும் இன்று தொடங்குகிறது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சபரிமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள்.
கார்த்திகை மாதம் இன்று பிறந்ததையொட்டி கோவில்களிலும் இன்று அதிகாலை ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள், மற்றும் அபிஷேகங்கள் நடந்தன. இன்று முதல் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைப்பிடிப்பார்கள். கறுப்பு, காவி ஆடை அணிந்து ருத்திராட்சம் அல்லது துளசி மாலை அணிந்தனர். கடுமையான விரதம் கடைபிடித்து ஐயப்பனை தரிசிப்பார்கள்.
ஐயப்பன் கோயில்களிலும், குடும்ப கோவில்களிலும் மாலை அணிந்து பக்தர்கள் விரதம் தொடங்கினர். இதையடுத்து தமிழகமெங்கும் துளசி, ருத்திராட்ச மாலைகள், கறுப்பு, காவி ஆடைகள் விற்பனைக்காக குவிந்துள்ளன.
பக்தர்கள் இறைச்சி சாப்பிடமால் இருந்து மலைக்குச் சென்று மாலையைக் கழற்றிய பிறகு விரதம் முடிப்பார்கள்.