கூடங்குளம் விவகாரம்: மத்திய, மாநில குழுக்கள் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 3 மாதங்களாக அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே மக்களின் அச்சத்தைப் போக்க மத்திய அரசு 15 நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்தது. அந்த குழு கடந்த 8ம் தேதி நெல்லை வந்தது. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து 6 பேர் கொண்ட மாநில குழுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
அப்போது போராட்டக்காரர்கள் சார்பில் அணு உலை பாதுகாப்பு குறித்து மத்திய குழுவிடம் 50 கேள்விகள் கேட்கப்பட்டது. எந்த தீர்வும் எட்டப்படாமல் முதல் சந்திப்பு முடிந்தபோதிலும், பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது என்றது மத்திய குழு.
இந்நிலையில் நாளை(18ம் தேதி) மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றன மத்திய, மாநில குழுக்கள்.
கூடங்குளத்தில் ஆய்வு
முத்துநாயகம் தலைமையில் 9 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று முன்தினம் கூடங்குளம் அணு மின்நிலையத்தை ஆய்வு செய்தனர். நேற்று 2வது நாளாக ஆய்வு தொடர்ந்து நடந்தது. 9 பேர் கொண்ட குழுவுடன் சென்னையைச் சேர்ந்த வேல்ஸ் பல்கலைக்கழக இயக்குநர் சுகுமாறன், சென்னை அடையார் புற்றுநோய் தடுப்பு நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் சாந்தா, மங்களூர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மத்தியஸ்தர் ஆகியோர் சேர்ந்து கொண்டனர்.
அந்த 12 பேரும் தனித்தனியாக பிரிந்து கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகளுடன் கதிரியக்க பாதுகாப்பு, அணுமின் நிலையத்தில் இருந்து வெப்ப நீர் கடலில் கலப்பது, கடல்சார் உயிரினங்களின் பாதுகாப்பு, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய விதிகளின்படி அணு உலைகளின் தரம், அதன் கட்டுமானம் உள்ளி்ட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு இன்றுடன் நிறைவுபெறுகிறது.












Click it and Unblock the Notifications