திமுக வேட்பாளருக்கு சாதிச் சான்றிதழ் தராதது சரியல்ல: மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் நகராட்சி திமுக வேட்பாளர் மாரியப்பனுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க மறுத்தது முறையன்று என்று மதுரை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சங்கரன்கோவில் நகராட்சி 13வது வார்டில் திமுக சார்பி்ல் நகர திமுக பொருளாளர் மாரியப்பன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் பேச்சியப்பன் என்பவர் போட்டியிட்டார். வேட்புமனு பரீசிலனையின் போது தி்முக வேட்பாளர் மாரியப்பன் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவர் என்பதால் அவரது மனுவை ஏற்றுக் கொள்ளக் கூடாது என தேர்தல் அதிகாரி செந்தில்முருகனிடம் அதிமுக வேட்பாளர் பேச்சியப்பன் வாதிட்டார்.
இதேபோல் தாசில்தாரும் மாரியப்பன் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர் என ஆட்சேபனை தெரிவித்ததால் மாரியப்பனின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதே வார்டில் மாரியப்பன் தம்பி ஜெகஜீவன்ராம் மாற்று வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தனக்கு இந்து பறையர் என சான்றிதழ் தர தாசில்தார் மறுத்ததாகக் கூறி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மாரியப்பன் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் கே. என். பாஷா, வேணுகோபால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
மாரியப்பன் இந்து சமயத்தினை பின்பற்றுவதற்குரிய சான்றுகளை வட்டாட்சியரிடம் சமர்ப்பித்துள்ள போதிலும் வட்டாட்சியர் ஆவணங்களை சரிவர ஆராயாமல் இந்து பறையர் என சான்றழிக்க இயலாது என தெரிவித்து இருப்பது சட்டத்துக்கு முரணான செயலாகும். வட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்வதுடன், மாரியப்பனின் சாதிச் சான்றிதழ் மீது உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுத்து, அவரது உறவினர்களுக்கு வழங்கப்பட்டது போல் சாதிச் சான்றிதழ் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.












Click it and Unblock the Notifications