என்னை சட்டையை பிடித்து கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு- சரத்குமார் உருக்கம்!
தென்காசி:என்னை சட்டையை பிடித்து கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு என சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும்,தென்காசி எம்.எல்.ஏவுமான நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
தென்காசி புனித மிக்கேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சங்கம் சார்பில் கட்டப்பட்ட சைக்கிள் ஸ்டாண்ட் திறப்பு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா ஆகிய இருபெரும் விழா நடந்தது.
விழாவிற்கு சரத்குமார் தலைமை வகித்து சைக்கிள் ஸ்டாண்டை திறந்து வைத்து மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசும் போது, ""நானும் சாதாரண மனிதன்தான். உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் நான் கடந்த ஒரு மாதமாக தென்காசிக்கு வர இயலவில்லை. கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நூலகம் சென்று அறிவை வளர்த்து கொள்ளுங்கள். கேள்வி ஞானம் வேண்டும். இன்றைய சூழ்நிலையில் தினமும் படிக்க வேண்டும். புத்தக படிப்புடன் உலக அறிவையும் வளர்த்து கொள்ள வேண்டும். எனது மகனுக்கு 7 வயது ஆகிறது. அவனிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொள்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு தற்போதைய கல்வி அறிவு வளர்ந்து விட்டது.
கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. குழந்தைகள் பெற்றோரிடம் இருப்பதை விட அதிக நேரம் பள்ளியில்தான் இருக்கின்றனர். குழந்தைகளின் திறமையை ஆசிரியர்கள்தான் கண்டறிகின்றனர். ஆசிரியர்களைதான் நாம் முதல் கடவுளாக ஏற்று மரியாதை செலுத்த வேண்டும். என்னை வளர்த்து ஆளாக்கியது மக்கள்தான். என் படங்களை நீங்கள் பார்த்து எனக்கு பணத்தையும், புகழையும் கொடுத்தீர்கள். இன்று என்னை தென்காசி எம்.எல்.ஏ.,ஆக்கியுள்ளீர்கள்.
நான் கல்லூரியில் படிக்கும் போது அதிகளவில் எம்.ஜி.ஆர்.படம் பார்ப்பேன். இதனால் கல்லூரியில் இருந்து என்னை நீக்கி விட்டனர். என் அப்பா உடற்பயிற்சியில் தீவிரம் காட்ட வலியுறுத்தினார். அதனால் இன்று நான் 57 வயது ஆனாலும் 25 வயது இளைஞனாக இருக்கிறேன். இதுதான் எனது உழைப்பு. மனிதனுக்கு அதிகம் செல்வம் வந்தால் அதனை பகிர்ந்து அளிக்க அவன் முன் வரவேண்டும். எல்லோருக்கும் கடைசியில் ஆறு அடி நிலம்தான் தேவை.
இப்பள்ளிக்கு கட்டடம் கட்ட எனது சொந்த பணத்தில் இருந்து 5 லட்சம் ரூபாய் கொடுப்பேன். எம்.எல்.ஏ.,நிதியில் இருந்து எவ்வளவு நிதி ஒதுக்கலாம் என பின்னர் கூறுகிறேன். கடந்த ஒரு மாத காலமாக நான் தென்காசிக்கு வரவில்லை என்று என்னிடம் செல்போனில் பலர் கூறினர். நான் அதற்கு பெருமைப்படுகிறேன். நான் ரோட்டில் செல்லும் போது என்னை சட்டையை பிடித்து கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு.
தென்காசி தொகுதியை 5 ஆண்டுகளில் தொழில் வளம் மிக்க தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். இதற்காக தொகுதி முழுவதும் சர்வே செய்யும் பணி நடக்கிறது. நான் இங்கு வீடு கட்ட இடம் பார்த்துள்ளேன். வீடு கட்டி இங்கேயே குடும்பத்துடன் வசிப்பேன். தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். இறைவன் படைப்பில் அனைவரும் சமம். சாதி, மத வேறுபாடுகள் இன்றி செயல்பட வேண்டும். குழந்தைகளின் திறமையை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்துங்கள்'' என்றார் அவர்.












Click it and Unblock the Notifications