பிரதமர் கடிதத்தை குப்பையில் போட்டு விட்டன மாநில அரசுகள்- சுப்ரீம் கோர்ட் வேதனை
டெல்லி: சிபிஐ விசாரித்து வரும் வழக்குகளை தனியாக, விரைவாக விசாரிக்க வசதியாக தனி கோர்ட்டுகளை ஏற்படுத்துங்கள் என்று பிரதமர் எழுதிய கடிதங்களை மாநில அரசுகள் தூக்கி குப்பையில் போட்டு விட்டன. இது பெரும் கவலை தருகிறது என்று உச்சநீதிமன்றம் கோபத்துடன் கூறியுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு சிபிஐ விசாரித்து வரும் வழக்குகளை விரைவாக விசாரிக்க வசதியாக தனி கோர்ட்டுகளை ஏற்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியிருந்தார் பிரதமர் மன்மோகன் சிங். இந்த வழக்குகளில் பெரும்பாலானவை அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் சம்பந்தப்பட்டவையாகும்.
மொத்தம் 71 கோர்ட்கள் அமைக்க மத்திய அரசு அனுமதியும் கொடுத்தது. ஆனால் பெரும்பாலான மாநிலங்கள் இந்த சிறப்பு கோர்ட்களை அமைக்கவில்லை. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி, குஜராத், மேற்கு வங்கம், ஆந்திரா உள்ளிட்ட 8 மாநிலங்கள் பிரதமரின் உத்தரவை மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்துக் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், பிரதமரின் கடிதத்தை மாநில அரசுகள் குப்பையில் தூக்கிப் போட்டுள்ளன. இது கவலை தரும் அம்சமாகும் என்று கோபத்துடன் தெரிவித்தது.
இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் மேலும் கூறுகையில், பெரும்பாலான சிபிஐ வழக்குகளில் அரசு ஊழியர்களும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் எழுதிய கடிதம் குப்பைத் தொட்டிக்குப் போயுள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. சம்பந்தப்பட்ட மாநிலங்கள் நீதிமன்ற அவமதிப்பையும் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்க விரும்புகிறோம்.
நிர்வாக முடிவுகளை மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் எடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் இதுபோன்ற முக்கியப் பிரச்சினைகளில் செயல்படுவதில்லை. இது கவலை தருகிறது என்றனர்.
டெல்லி அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், டெல்லி மாநிலத்தில் 19 சிபிஐ கோர்ட்கள் இருப்பதாகவும், அதில் 1042 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications