திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட கட்டடத்தை காலி செய்ய முத்தமிழ்ப் பேரவைக்கு நோட்டீஸ்
சென்னை: திமுக ஆட்சியில் கட்டப்பட்ட, ஒதுக்கப்பட்ட கட்டடங்களுக்கு தற்போது நேரம் சரியில்லை. அடுத்தடுத்து ஒவ்வொரு கட்டடமாக மூடு விழா கண்டு வரும் நிலையில் கடந்த திமுக ஆட்சியின்போது கொடுக்கப்பட்ட திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் அரங்கம் கட்டடத்தைக் காலி செய்யுமாறு முத்தமிழ்ப் பேரவைக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம்.
கடந்த 2009ம் ஆண்டு அடையாரில், முத்தமிழப் பேரவைக்காக பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான நிலம் ஒதுக்கப்பட்டது. அங்கு திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் அரங்கம் கட்டப்பட்டது. அந்த இடத்தில் முத்தமிழ்ப் பேரவை அமைந்தது.
இந்த இடம் 30 ஆண்டு குத்தகையாக, ஆண்டுக்கு ரூ., 1000 கட்டணத்தில் ஒதுக்கப்பட்டது. பின்னர்தான் இங்கு ரூ. 5 கோடி செலவில் கட்டடம் கட்டப்பட்டது.
தற்போது இந்த இடத்தை காலி செய்யுமாறு முத்தமிழப் பேரவைக்கு பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இதுதொடர்பாக நேற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த கட்டடத்திற்குச் சென்று ஆய்வுகளையும் மேற்கொண்டனராம்.
ஏன் இந்த நடவடிக்கை என்று விசாரித்தபோது, இந்த முத்தமிழ்ப் பேரவையில் பல்வேறு பொறுப்புகளில் திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தார் பலர் உள்ளனராம்.
மேலும், நிலம் ஒதுக்கப்பட்டது, கட்டடம் கட்ட அனுமதி தந்தது உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறி இந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.