தை மாதத்தில் புதுக்கட்சி: மாஜி பாமக எம்எல்ஏ வேல்முருகன் அறிவிப்பு
சென்னை: தை மாதத்தில் புதுக்கட்சி தொடங்கப் போவதாக பாமகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல் வேல்முருகன் கூறினார்.
மேலும் உயிர் உள்ளவரைக்கும் மீண்டும் பாமகவிற்கு செல்ல மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், பாமக தொடங்கப்பட்டபோது வகுத்த கொள்கைகளை கடைபிடிக்கவில்லை. அந்த குறிக்கோள்களை சுட்டிக் காட்டி வலியுறுத்தும்போது என்னை எதிரியாக நினைத்து வெளியேற்றுகிறார்கள். பாமகவின் அடிப்படை பொறுப்பில் இருந்து என்னை நீக்கி இருக்கிறார்கள்.
என்னை நீக்கியதற்கான காரணத்தை இதுவரை டாக்டர் ராமதாஸ் கூறவில்லை. கட்சி கூட்டத்தில் நான் பேசும்போது, சிலர் என்னை எதிர்த்து பேசினார்கள். அப்போது டாக்டர் ராமதாஸ்- அன்புமணி தட்டிக் கேட்கவில்லை.
இனி என் உயிர்மூச்சு இருக்கும் வரை நான் மீண்டும் பாமகவிற்கு செல்ல மாட்டேன்.
'தை"யில் தனிக்கட்சி:
பாமகவில் உள்ள 80 சதவீத தொண்டர்கள் எனக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், பல்வேறு சமூக அமைப்பு தலைவர்கள் மற்றும் பாமக தொண்டர்கள் என்னிடம் பேசி வருகிறார்கள். அவர்களது ஆலோசனைப்படி விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல தை மாதம் பிறந்தவுடன் கட்சி பெயரை அறிவிப்பேன். கட்சியின் பெயர், கொடி, கொள்கைகள் குறித்து என்னிடம் தொடர்பில் உள்ளவர்களுடன் கலந்து பேசி அறிவிப்பேன்.
பாமகவில் நான் இருந்த போது பல மாநாடுகளை நடத்தி இருக்கிறேன். பல தேர்தல்களை சந்தித்து இருக்கிறேன். அதே போல் இந்த கட்சியையும் சிறப்பான முறையில் நடத்துவேன் என்றார்.