ஜாமீனில் வெளி வந்த எதியூரப்பா மீது மேலும் ஒரு நிலஅபகரிப்பு புகார்
பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா மீது ஏற்கனவே 5 ஊழல் வழக்குகள் உள்ளது. இந்நிலையில் அவர் மீது புதிதாக நிலஅபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா மீது 5 ஊழல் வழக்குகள் உள்ளன. இந்நிலையில் அவர் மீதும் வீட்டுவசதித் துறை அமைச்சர் வி.சோமண்ணா மீதும்அரசு நிலத்தை அபகரித்ததாக ஊழலை விசாரிக்கும் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ரவிசங்கர் ரெட்டி என்பவர் கொடுத்த அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எதியூரப்பா கர்நாடக முதல்வராக இருந்தபோது வீட்டுவசதித் துறை அமைச்சர் வி.சோமண்ணா அரசு நிலத்தை தனது மனைவி ஷைலஜா பெயரில் பட்டா போட்டு அபகரித்தார். அவரின் செயலால் அரசுக்கு ரூ.8 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
2 வழக்குகளில் எதியூரப்பாவுக்கு முன்ஜாமீன்
கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பாவுக்கு மேலும் 2 ஊழல் வழக்குகளில் முன்ஜாமீன் கிடைத்துள்ளது. எதியூரப்பா மீது மொத்தம் 5 ஊழல் வழக்குகள் உள்ளன. அதில் 2 வழக்குகளில் ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து அவர் விடுதலை ஆனார். இந்நிலையில் மேலும் 2 வழக்குளில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது கர்நாடக உயர் நீதிமன்றம்.
மீதமுள்ள ஒரு வழக்கின் ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் தான் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் அவர் மீது மேலும் ஒரு நிலஅபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.