இனி ஆன்லைனில் வாகனவரி கட்டலாம்!
சென்னை: வாகன கட்டணங்கள் மற்றும் வரிகளை ஆன்லைனில் செலுத்தும் திட்டத்தை உடனே செயல்படுத்துமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பெருமளவில் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும், போக்குவரத்து துறையின் சேவைகள் மக்களுக்கு எளிதில் கிடைத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையிலும், புதிய அலுவலகங்களை உருவாக்குதல், ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ்கள் பெறுவதற்கான நடைமுறைகளை எளிதாக்குதல், அனைத்து அலுவலகங்களையும் கணினிமயமாக்கல் போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான நட வடிக்கைகளை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
போக்குவரத்துத் துறையில் அனைத்து பணிகளும் தற்பொழுது கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. இத்துறைக்கென தனியாக ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டு, அதன் வாயிலாக, அஞ்சல் குறியீட்டு எண் மூலம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை அறிந்து கொள்ளுதல்; பல்வேறு சேவைகளுக்கான விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளுதல்; ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்; பழகுநர் உரிமம் மற்றும் பல்வேறு போக்குவரத்துத்துறை தொடர்பான விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் என பல்வேறு சேவைகள் மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் பகுதி அலுவலகத்திற்கு வரிகள் மற்றும் கட்டணங்கள் செலுத்துவதற்காக பொது மக்கள் அதிக அளவில் நாள்தோறும் வருகின்றனர். இதனால் போக்குவரத்து அலுவலகங்களில் அதிகளவு மக்கள் கூட்டம் தினந்தோறும் கூடுவதால், பொதுமக்கள் அதிக நேரம் வரிசையில் காத்திருந்து கட்டணங்கள் மற்றும் வரி செலுத்த வேண்டியுள்ளது. இது பொதுமக்களுக்கு அதிக காலவிரயத்தை ஏற்படுத்துகிறது.
எனவே பொது மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், போக்குவரத்து வட்டார அலுவலகங்களுக்கோ அல்லது பகுதி அலுவலகங்களுக்கோ நேரிடையாக செல்லாமல் வீடு அல்லது அலுவலகம் அல்லது கணினி மையம் ஆகிய ஏதாவது ஓரிடத்திலிருந்து கணினி மூலமாகவோ அல்லது வங்கிகள் மூலமாகவோ வாகன கட்டணங்கள் மற்றும் வரிகளை நேரிடையாக போக்குவரத்துத்துறைக்கான இணைய தளம் மூலம் செலுத்தும் திட்டத்தினை உடனே துவக்கும்படி முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்கள். இதனை செயல்படுத்தும் வகையில், 1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு மோட்டார் வாகன வரி விதிகள் மற்றும் 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் ஆகியவற்றில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் இந்த திட்டத்தினை ஒரு மாத காலத்திற்குள் செயல்படுத்தவும், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் புதிய திட்டம் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரிடையாக செல்லாமலேயே கட்டணங்கள் மற்றும் வரிகளை கணினி மூலம் செலுத்த வழிவகை செய்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications