கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்கக் கோரி எம்பிக்கள் வீட்டு முன்பு மறியல்!
நெல்லை : கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின்உற்பத்தியை உடனே தொடங்க வலியுறுத்து பாளையங்கோட்டையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அணு மின் நிலையத்தை திறக்க வலியுறுத்தி அடுத்த கட்டமாக அனைத்து எம்பிக்கள் வீட்டு முன்பும் மறியல் போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடக்கோரி பலவித போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அணுமின்நிலையத்திற்கு ஆதரவாக
பாளையங்கோட்டை ஜஹவர் திடலில் உண்ணாவிரதம் நடைபெற்றது. அனைத்து வணிகர் கூட்டமைப்பின் தலைவர் மயிலை பெரியசாமி உண்ணாவிரதத்தை துவங்கி வைத்தார்.
உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க நிறுவன தலைவர் சந்திரன்ஜெயபால் கூறியதாவது:
தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவி்ன் பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையில்லா மின்சாரம் அவசியம். எனவே கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உடனடியாக மின் உற்பத்தியை துவக்க வேண்டும். தமிழக அரசும் கூடங்குளம் அணு மின் நிலைய பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட வேண்டும்.
எம்.பிக்கள் வீட்டு முன் போராட்டம்
கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க வலியுறுத்தி அடுத்த கட்டமாக அனைத்து எம்பிக்கள் வீட்டு முன்பும் மறியல் போராட்டம் நடத்துவோம். பாபநாசம், பேச்சிபாறை அணைகளை கட்டும்போது ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால் கூடங்குளம் அணு மின் நிலையத்தால் யாரும் வெளியேறவில்லை. கிராம பொருளாதார வளர்ச்சிக்கு மின்சாரம் அவசியம்.
எனவே கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நான் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்திலிருநது தான் வருகிறேன். 25 ஆண்டு காலத்திற்கும் மேலாக அங்கு அணு மின் நிலையம் உள்ளது. ஆனால் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை. வடமாவட்டங்கள் வளர்ந்த அளவு தென்மாவட்டங்கள் வளரவில்லை.
எனவே கூடங்குளம் அணு மின் நிலையம் வந்தால் தான் தென்மாவட்டம் வளர்ச்சி அடையும். நமது பகுதியில் சுனாமி வர வாய்ப்பில்லை. கற்பனை பயங்கள் வேண்டாம். கூடங்குளம் மின் உற்பத்தியை உடனே துவங்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications