தமிழக காங்கிரஸை பலப்படுத்துங்க - ஞானதேசிகனுக்கு சோனியா அட்வைஸ்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்ற ஞானதேசிகன், டெல்லி சென்று கட்சித் தலைவர் சோனியா காந்தி, தமிழகப் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் ஆகியோரை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமனம் செய்யப்பட்டதற்கு சோனியா காந்தியிடம் நன்றி தெரிவித்தேன்.
அப்போது தமிழகத்தில் உள்ள அனைத்து குழுக்களையும் ஒன்று சேர்த்து கட்சியைப் பலப்படுத்த வேண்டும், இதற்கானப் பணியை உடனே தொடங்க வேண்டும் என்று சோனியா காந்தி கேட்டுக் கொண்டார்.
அவரது ஆணையை ஏற்று இதற்கான நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்படும் என்று அவரிடம் உத்தரவாதம் அளித்துள்ளேன்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளேன். அவர்களது கருத்துகளும் செயல் திட்டத்தில் சேர்க்கப்படும்.
கூட்டணி தொடரும்
தமிழகத்தில் தி.மு.க. உடனான காங்கிரஸ் கூட்டணி தொடர்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மத்திய அரசு மீதான ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை", என்றார் ஞானதேசிகன்.












Click it and Unblock the Notifications