குடிமகன்களுக்கு மேலும் ஷாக் - மதுபானங்களின் விலையும் உயர்கிறது?

தமிழக அரசு டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் 6,500 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. மதுக்கடைகளை அரசு ஏற்று நடத்த தொடங்கிய 2003 ஆம் ஆண்டு முதல் ஆண்டில் கூடுதலாக ரூ.1500 கோடி வரை லாபம் கிடைத்தது.
இதன்பின்னர் 2010-2011ம் ஆண்டில் டாஸ்மாக் வருமானம் 14 ஆயிரம் கோடியாக அதிகரித்தது. மற்ற துறைகளைக் காட்டிலும் அரசுக்கு டாஸ்மாக் மூலம் வரக்கூடிய வருவாய் 15 முதல் 20 சதவீதமாகும். இந்த வருவாய் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், அரசின் நிதிப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் 'எலைட் ஷாப்" டாஸ்மாக் கடைகள் திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக மொத்தம் 55 கடைகள் திறக்கப்படுகின்றன. இந்த கடைகளில் வெளிநாடு, உள்நாட்டில் உள்ள உயர்ரக மது வகைகள் விற்கப்பட உள்ளது. இதில் கிடைக்கும் வருவாயை தொடர்ந்து, மேலும் கூடுதலாக கடைகளை திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திடீர் விலை உயர்வு
இந்நிலையில், நிதிப்பற்றாக்குறையை காரணம் கூறி தமிழக அரசு நேற்று முன்தினம் பால் விலை, பேருந்து கட்டணங்களை உயர்த்தியது. இதே போல மின் கட்டணத்தையும் அரசு உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் நடந்து வருகிறது.
எனவே விலை உயர்வை சற்று குறைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், எந்த பொருட்களின் விலையை உயர்த்தலாம் என்று அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. டாஸ்மாக் மதுபானங்களில் விலையை கூட்டினால் யாரும் எதுவும் கேட்கப் போவதில்லை என்பதால், அதன் விலையை உயர்த்த அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுபானங்கள் விலை உயர்வு
அதிமுக அரசு பதவி ஏற்ற உடன் கடந்த ஜூலை 10ம் தேதி
பீர் விலை ரூ. 10 வரையும், பிராந்தி விலை அதிகபட்சமாக ரூ.25 வரையும் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு மாதத்துக்கு ரூ.150 கோடிக்கு மேல் கூடுதல் வருவாய் கிடைத்தது. இதன் காரணமாக இலவச லேப் டாப் வழங்கும் திட்டம், கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்பட்டது.
அதேபோல் மீண்டும் ஒருமுறை பீர் பாட்டிலுக்கு ரூ.10 வரையும், பிராந்தி, விஸ்கிக்கு ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.25 வரையும் உயரும் என்று தெரிகிறது.
பதவிக்கு வந்த ஆறே மாதங்களில் இரண்டாவது முறையாக மதுபான விலையை உயர்த்தப் போகிறது மத்திய அரசு.












Click it and Unblock the Notifications