ஒரிசாவில் மனஅமைதிக்காக தங்கையை நரபலி கொடுத்த வாலிபர் கைது
பாரிபடா: மன அமைதி மற்றும் செல்வம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரிசாவின் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் தனது தங்கையை நரபலி கொடுத்துள்ளார்.
ஒரிசாவின் மயூர்பஞ்ச் மாவட்ட பழங்குடியின மக்களிடம் மூடநம்பிக்கைகள் மண்டிப்போய் உள்ளது. சந்துலா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் மங்கல் மாராண்டி(38). அவரது தங்கை காஜல் மாரண்டி(35). காஜலின் மகனும், மகளும் திருமணமாகி தனியாக வாழ்வதால் அவர் தனது தாய் தனகி மாராண்டி(65) மற்றும் மூத்த சகோதரன் மங்கலுடன் தங்கி இருந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மங்கல் தனது தாயுடன் தகராறு செய்துள்ளார். இதையடுத்து தனகி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். வீட்டில் மங்கலும், காஜலும் தான் இருந்துள்ளனர். இந்நிலையில் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த காஜலை மங்கல் கொலை செய்து துண்டு, துண்டாக வெட்டி பலி கொடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்திற்கு தப்பிச் செல்ல முயன்ற அவரை போலீசார் சன்சரபோஷி என்ற கிராமத்தில் வைத்து கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் காஜலை மன அமைதி மற்றும் செல்வம் கிடைக்க வேண்டி பலி கொடுத்ததாக மங்கல் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மங்கல் ஒரு பாம்பைக் கொன்றுள்ளார். மன அமைதி மற்றும் செல்வம் கிடைக்க வேண்டும் என்றால் காஜலை பலி கொடுக்க வேண்டும் என்ற பாம்புக் கடவுளின் வலியுறுத்தலின்படி பலி கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.
தன்னைக் கொன்றதற்கு பதில் மங்கல் குடும்பத்தினர் யாரையாவது பலி கொடுக்கவில்லை என்றால் குடும்பத்தையே அழி்த்துவிடுவதாக அந்த பாம்பு மங்கல் கனவில் வந்து தெரிவித்துள்ளது. இதையடுத்து தான் காஜலை கொன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.