சபரிமலையில் குவிந்த பக்தர்கள்: தரிசனத்திற்கு 6 மணி நேரம் காத்திருப்பு
திருவனந்தபுரம்: சபரிமலையில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
மண்டல கால பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட அன்றே வரலாறு காணாத அளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. இந்த ஆண்டு அதிகாலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. வழக்கமாக திங்கள் முதல் வெள்ளி வரை கூட்டம் குறைவாக இருக்கும். ஆனால் நேற்று வழக்கத்திற்கு மாறாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நேற்று பிற்பகல் 2 மணி அளவில் வரிசையில் நின்ற பக்தர்கள் இரவு 8 மணிக்கு பின்னரே தரிசனம் செய்ய முடிந்தது. நெய் அபிஷேகத்திற்கு நேற்று நீண்ட வரிசை காணப்பட்டது. அதிகாலை 3.15 மணிக்கு நெய் அபிஷேகம் செய்ய முந்தைய நாள் இரவே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து கமாண்டோ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.