குளத்தில் மூழ்கி சிறுவன் பலி- நண்பனைக் காக்கச் சென்ற சிறுவனும் மரணம்
அறந்தாங்கி: அறந்தாங்கியில் 2 குழந்தைகள் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த கீரணிபட்டியைச் சேர்ந்தவர் குமார் (34). கூலித் தொழிலாளி. அவரது மகன் வரதராஜபெருமாள் (3). அதே பகுதியில் வசிப்பவர் சங்கர். அவரது மகன் முருகேசன் (4). சகோதரர்களான சங்கரும், குமாரும் சென்னையில் உள்ள தனியார் கம்பெனிகளில் வேலை பார்த்து வருகின்றனர்.
வரதராஜபெருமாளும், முருகேசனும் அதே பகுதியில் உள்ள பால்வாடி மையம் ஒன்றில் சேர்க்கப்பட்டு இருந்தனர். தினமும் பால்வாடி மையத்துக்கு 2 பேரும் ஒன்றாய் சேர்ந்து சென்று, மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.
நேற்று காலையில் பால்வாடி மையத்திற்கு சென்ற முருகேசனும், வரதராஜபெருமாளும் மாலையில் நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. 2 பேரின் பெற்றோரும் குழந்தைகளை பல இடங்களில் தேடினர். அப்போது பால்வாடி மையம் அருகே உள்ள குளக்கரையில் 2 குழந்தைகளின் உடைகள் கிடைத்தன. அந்த குளத்தில் இறங்கி தேடிய போது 2 குழந்தைகளின் உடல்களும் கிடைத்தன.
தகவல் அறிந்த புதுபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பால்வாடி முடிந்து வீடு திரும்பும் வழியில் வரதராஜ பெருமாள் குளத்தில் இறங்கியுள்ளான். அப்போது கால் தவறி குளத்தில் விழுந்த வரதராஜ பெருமாள் நீச்சல் தெரியாமல் தத்தளித்துள்ளான். அதனை கண்ட முருகேசனும் குளத்தில் குதித்துள்ளான். ஆனால் 2 பேருக்கும் நீச்சல் தெரியாமல் குளத்தில் மூழ்கி இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications