விண்ணப்பதாரர்களிடம் மோசடி: மதுரை பாஸ்போர்ட் சேவாமையத்தில் 6 புரோக்கர்கள் கைது
மதுரை: மதுரை கோச்சடை பாஸ்போர்ட் சேவா மையத்திற்கு வரும் விண்ணப்பதாரர்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த 6 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை கோச்சடை பகுதியில் பொது மக்கள் வசதி்க்காக பாஸ்போர்ட் சேவா மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்திற்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர். அவ்வாறு வருபவர்களில் பலரை சேவா மையத்திற்கு அருகில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளவர்கள் அணுகி பேசுகிறார்கள். விண்ணப்பம் பூர்த்தி செய்வதில் இருந்து அனைத்து வேலைகளையும் தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும், விண்ணப்பதாரர்கள் அதிகாரிகளைப் பார்த்தால் மட்டும் போதும் என்று கூறுகின்றனர்.
அதற்காக அவர்கள் நபர் ஒருவரிடம் ரூ.500 முதல் ரூ.1000 வரை வசூல் செய்கின்றனர். இது மட்டுமில்லாமல் உண்மையற்ற மாற்று ஆவணங்களை சமர்பிக்க தூண்டுதலாக உள்ளனர்.
இந்த விஷயம் மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி ஜோஸ் மேத்யூ காதுகளுக்கு எட்டியது. அவர் உடனே இது குறித்து போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து நேற்றுமுன்தினம் மாலை திலகர்திடல் உதவி கமிஷனர் கணேசன் தலைமையிலான போலீசார் பாஸ்போர்ட் சேவா மையத்திற்கு அருகில் உள்ள ஜெராக்ஸ் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி 6 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் மதுரை திருப்பாலை ஜெயச்சந்திரன்(45), கீரைத்துரை சங்கர்நாராயணன்(35), காடுபட்டி செல்லபாண்டி(44), புதூர் முகமதுவாசிம் அக்ரம்(19), காதர்பாஷா(29), அருள்தாஸ்புரம் சையதுபுர்ஜி(32) என்று தெரிய வந்தது. விண்ணப்பதாரர்களிடம் பணம் வசூலித்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications