வளர்ப்பு மகன் சுதாகரன் கல்யாணத்திற்கு நான் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை- ஜெ.

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதில் இதுவரை நேற்றுடன் சேர்த்து மொத்தம் 3 முறை நேரில் ஆஜராகி நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு ஜெயலலிதா பதிலளித்துள்ளார். கிட்டத்தட்ட 1000 கேள்விகளுக்கு மேல் அவர் பதிலளித்துள்ளார்.
இதுவரை அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் 90 சதவீதத்திற்கும் மேலான கேள்விகளுக்கு இல்லை என்றும் தெரியாது என்றும், தொடர்பில்லை என்றும் ஜெயலலிதா பதிலளித்துள்ளார்.
சுதாகரனின் ஆடம்பரத் திருமணம்
நேற்று முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணச் செலவு தொடர்பான கேள்வி ஜெயலலிதாவிடம் கேட்கப்பட்டது. இதுகுறித்து அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
3ம் நாளாக ஜெயலலிதா இன்று ஆஜரானார். காலை 11 மணி தொடங்கி மாலை 5.20 மணிவரை நீதிபதி கேள்விகளை கேட்டார். இன்று 580 கேள்விகளுக்கு பதிலளித்தார். இதுவரை அவரிடம் 1147 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இன்னும் 192 கேள்விகள் பாக்கி உள்ளது. நாளை அந்த கேள்விகளும் கேட்கப்படும்.
இன்று அவர் தனது வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்துக்கு ரூ.6 கோடி செலவு செய்தது தொடர்பான கேள்விக்கு, 'நான் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை. முழு செலவையும் பெண் வீட்டாரே ஏற்றுக் கொண்டனர்" என்று பதிலளித்தார். மேலும், வங்கி கணக்கு, தொழிற்சாலைகளில் பங்கு தொடர்பான கேள்விகளுக்கு 'நான் எதிலும் முதலீடு செய்யவில்லை. என் மீது பற்று கொண்டவர்கள் என் பெயரை சேர்த்திருக்கலாம். எனக்கு தெரியாது" என்று பதிலளித்தார்.
'எனக்கு தெரியாது" அல்லது 'நினைவில்லை"
தொண்ணூறு சதவீத கேள்விகளுக்கு 'எனக்கு தெரியாது" அல்லது 'நினைவில்லை" என்று பதிலளித்தார்.
செவ்வாய்க்கிழமையன்று நீதிபதி கேட்ட பெரும்பாலான கேள்விகள் ஜெயலலிதா பங்குதாரராக இருந்த நிறுவனங்கள், கம்பெனிகள் வாங்கிய சொத்துக்கள் குறித்ததாக இருந்தது. அதுகுறித்து ஜெயலலிதா விளக்குகையில், இந்த நிறுவனங்களின் அன்றாட பணிகளை நான் தினசரி மேற்பார்வையிடுவதில்லை. அதுகுறித்து எனக்குத் தெரியாது. அதில் நான் நேரடிப் பங்குதாரராக இருக்கவில்லை என்பதால் அவற்றின் நிதி நிலை குறித்தும், நிதிப் பரிவர்த்தனை குறித்தும், சொத்து வாங்குதல் குறித்தும் எனக்குத் தெரியாது.
உங்களது வங்கிப் பரிவர்த்தனைகள் குறித்தாவது உங்களுக்குத் தெரியுமா என்று நீதிபதி கேட்டபோது அது தெரியும் என்றார் ஜெயலலலிதா என்றார் ஆச்சார்யா.
தெளிவாக, நிதானமாக பதிலளித்தார் - ஜெ. வக்கீல்
முதல்வர் ஜெயலலிதாவின் வக்கீலான பி.குமார்கூறுகையில், நீதிபதி கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் முதல்வர் ஜெயலலிதா நிதானமாகவும், தெளிவாகவும் பதிலளித்துள்ளார். மீதமுள்ள கேள்விகளுக்கும் அவர் புதன்கிழமை பதிலளிப்பார் என்றார்.
இன்னும் 192 கேள்விகள் பாக்கி
இந்த வழக்கில் 252 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் 1384 கேள்விகளை நீதிமன்றம் தயாரித்துள்ளது. அதில் ஜெயலலிதா பதிலளிக்க வேண்டியது 1339 கேள்விகளாகும். அதில் இதுவரை கேட்கப்பட்ட 1147 கேள்விகள் போக மீதம் 192 கேள்விகள் பாக்கி உள்ளன. அவற்றுக்கு இன்று ஜெயலலிதா பதிலளிப்பார்.












Click it and Unblock the Notifications