போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் நக்ஸல் தலைவர் கோடீஸ்வர ராவ் சுட்டுக் கொலை?
புருலியா: ஆந்திரா, ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களில் செயல்பட்டு வந்த நக்ஸல் தலைவர் கோடீஸ்வர ராவ் என்ற கிஸன்ஜி இன்று போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.
மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டம், புரிசோல் கிராமத்தில் வனப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போலீசார் ராவ் மற்றும் அவருடன் இருந்த 5 நக்ஸலைட்டுகளை சுற்றி வளைத்தனர்.
இதையடுத்து போலீசாருக்கும் நக்ஸல்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. அரை மணி நேர சண்டைக்குப் பின் கோடீஸ்வர ராவ் மற்றும் 4 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நேற்று முன் தினம் இவர் மேற்கு மிதினாபூர் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து மேற்கு வங்க தீவிரவாத எதிர்ப்புப் படை போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் அவர் தப்பியோடிவிட்டார்.
இந் நிலையில் இன்று புருலியா மாவட்டத்தில் வைத்து அவரை போலீசார் சுற்றி வளைத்துத் தாக்கியதால், அவர் கொல்லப்பட்டுவிட்டதாக மேற்கு வங்கத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.