போதை ஊசி மருந்து சப்ளை-மருந்து கடை உரிமையாளர், சேல்ஸ் ரெப் கைது
நாகர்கோவில்: வலி நிவாரணி மருந்துகளை போதைக்காக இளைஞர்கள், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விற்பனை செய்ததற்காக மருந்து கடை உரிமையாளர் மற்றும் விற்பனை பிரதிநிதியை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தி்ல் வாலிபர் ஒருவர் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், இளம்பெண்களுக்கு போதை ஊசி விற்பனை செய்துகொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் வடசேரி பேருந்து நிலையத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் பேருந்து நிலையத்தில் நின்ற வாலிபர் ஒருவரிடம் இருந்து வாலிபர்கள், இளம் பெண்கள் சிலர் பணம் கொடுத்து ஊசி மருந்துகளை வாங்கிச் சென்றனர். போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பதும், மருந்து விற்பனை பிரிதிநிதி போர்வையில் வலி நிவாரண ஊசி மருந்துகளை போதைக்காக கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள், இளம்பெண்களுக்கு சப்ளை செய்ததும் தெரிய வந்தது.
அவருக்கு மருந்து வினியோகம் செய்ததற்காக கருங்கல் அருகே மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வரும் சுந்தர் சிங் என்பவரையும் போலீசார் பிடித்தனர். இருவரிடமும் டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர்களை கைது செய்தனர்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கைதானவர்களிடம் இருந்து மொத்தம் 5 விதமான ஊசி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. அவை அனைத்தும் விபத்து ஏற்படும் சமயங்களில் காயத்தின் வலி தெரியாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் ஊசி மருந்துகள். பல மருந்துகள் காலாவதியாகி இருந்தன. இது போன்ற மருந்துகளை டாக்டர் சீட் இல்லாமல் வினியோகிக்கக் கூடாது.
ஆனால் இவர்கள் ரூ.100, ரூ.150 என வாங்கிக் கொண்டு ஊசி மருந்துகளை வினியோகித்து இருக்கிறார்கள். இந்த மருந்துகளை தொடர்ந்து உடலில் ஏற்றுவதன் மூலம் போதை ஏறும். நாளடைவில் இது உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும். முகமது அலி தன்னை மருந்து விற்பனை பிரதிநிதி என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். இவரது மொபைல் போனை ஆய்வு செய்ததில் வாலிபர்கள், கல்லூரி மாணவர்கள், சில மாணவிகள் கூட இவர்களுக்கு வாடிக்கையாளர்களாக இருந்துள்ளனர். சுந்தர்சிங் மருந்து கடைகளை காட்டி தான் இதுபோன்ற மருந்துகளை முகமது அலி வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே இருவரிடமும் கைப்பற்ற மருந்து, ஊசிகளை நெல்லையிலுள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். கைதான இருவர் மீதும் போதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.