ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் விஜயகாந்த் உண்ணாவிரதம்- ஜி.ராமகிருஷ்ணன் வாழ்த்து

முதல் முறையாக கூட்டணி அரசியலுக்குள் புகுந்து முதல் கூட்டணியாக அதிமுகவிடம் போய்ச் சேர்ந்தார். சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே இரு கட்சிகளுக்கும் இடையே பூசல் வெடித்தது. இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு இரு கட்சிகளும் தேர்தலை சந்தித்து பெரும் வெற்றி கண்டன. இதில் அதிமுகவை விட தேமுதிகவுக்கே நிறைய லாபம் கிடைத்தது.
இதனால் உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணியாக போட்டியிட ஆர்வமாக இரு்நதது தேமுதிக.ஆனால் ஜெயலலிதாவோ முகத்தில் அடி்ததாற் போல அத்தனை கூட்டணிக் கட்சிகளையும் (ஒன்றிரண்டு சிறிய கட்சிகளைத் தவிர்த்து) விரட்டி விட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த தேமுதிக சிபிஎம்முடன் கூட்டணி வைத்து தேர்தல் சந்தித்து மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. சட்டசபைத் தேர்தலில் 2வது இடத்துக்கு முன்னேறிய அக்கட்சி உள்ளாட்சித் தேர்தலில் 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.
இந்த நிலையில் இடையில் அதிமுகஅரசின் செயல்பாடுகள் குறித்து செய்தியாள்கள் விஜயகாந்த்திடம் கருத்துக் கேட்டபோதெல்லாம் 6 மாதமாகட்டும் சொல்கிறேன் என்று கூறி வந்தார். மே 16ம் தேதி ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார். தற்போது சட்டசபைத் தேர்தல் முடிந்தும், ஜெயலலிதா ஆட்சி அமைந்தும் 6 மாதமாகி விட்டது.
எனவே இனிமேலாவது அதிமுக அரசு குறித்து விஜயகாந்த் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதற்கேற்ப தேமுதிக சார்பில் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
காலை 8 மணிக்கு இந்தப் போராட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் முன்பு தொடங்கியது. அதேபோல மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டம் தொடங்கியுள்ளது.
கோயம்பேட்டில் நடந்து வரும் போராட்டத்திற்கு விஜயகாந்த் தலைமை தாங்கியுள்ளார். கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் விஜயகாந்த் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். காலையிலிருந்தே அவ்வப்போது மழை பெய்துவரும் நிலையிலும் உண்ணாவிரதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுவரை பெரிய அளவில் எந்தப் போராட்டத்திலும் தேமுதிக ஈடுபட்டதில்லை. இப்போதுதான் முதல் முறையாக மிகப் பெரிய அளவில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அது நடத்துகிறது. இன்று அதிமுக அரசின் செயல்பாடுகள் குறித்தும், முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் குறித்தும் விஜயகாந்த் சூடாகப் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜி.ராமகிருஷ்ணன் நேரில் வாழ்த்து
முன்னதாக உண்ணாவிரதம் தொடங்கிய சிறிது நேரத்தில் தமிழ் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், உண்ணாவிரத மேடைக்கு வந்தார். விஜயகாந்த்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ஜி.ராமகிருஷ்ணன், சிறிது நேரம் அவருடன் அமர்ந்து பேசி விட்டு பின்னர் கிளம்பிச் சென்றார்.












Click it and Unblock the Notifications