'ஒரே ஒரு அறை தானா'..ஹசாரேவின் உருவ பொம்மையை எதிர்த்த பவார் கட்சி தொண்டர்கள்
மும்பை: மகாராஷ்டிரம் முழுவதும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அன்னா ஹசாரேவின் உருவப் பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாரை நேற்று ஹர்விந்தர் சிங் என்ற சீக்கிய இளைஞர் கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்தினார்.
இது குறித்து ஹஸாரேவிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, என்ன.. ஒரே ஒரு அறை தான் விழுந்ததா என்று திருப்பக் கேட்டுவிட்டு பின்னர், என்ன இருந்தாலும் இந்தத் தாக்குதல் தவறானது என்று கண்டிக்கவும் செய்தார்.
இதன் மூலம் தாக்குதலை அவர் நியாயப்படுத்த முயன்றார்.
ஹசாரேவின் இந்தக் கருத்தால் கோபமடைந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் இன்று அவரது உருவப் பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஹசாரேவின் சொந்த ஊரான ரலேகாவ்ன் சித்திக்கு வந்த ஏராளமான தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த ஹசாரே, பவார் மீதான தாக்குதலை நான் கண்டித்துவிட்டேன். ஆனால், இப்போது இவ்வளவு கோபப்படும் நீங்கள், விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியபோது அமைதியாக இருந்தது ஏன் என்றார்.
இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஹசாரே மீது பவாரின் கட்சியினர் கடும் கோபத்தில் உள்ளதால், விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நடந்துவிடாமல் தடுக்க ஹசாரேவுக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் பாதுகாப்பு-உள்துறை மறு ஆய்வு:
சரத்பவார் மீதான தாக்குதலின் எதிரொலியாக அனைத்து மத்திய அமைச்சர்களின் பாதுகாப்பையும் மறு ஆய்வு செய்ய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அமைச்சர்களுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் தனி பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உள்துறை முடிவு செய்துள்ளது.
ஹசாரேவுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை-ஓம் பூரி:
இதற்கிடையே, 3 மாதங்களுக்கு முன் ஹசாராவே ஆகா.. ஓஹோ என்று புகழ்ந்து பேசிய நடிகர் ஓம் பூரி இன்று அவரை கடுமையாக விமர்சித்தார்.
ஓம் பூரி கூறுகையில், ஹசாரே நேர்மையானவராக இருக்கலாம். ஆனால், அவரது செயல்பாடுகள் ஏற்கத்தக்க வகையில் இல்லை. அவருக்கு தொலைநோக்குப் பார்வை கூட இல்லை. நீண்ட கால திட்டங்களை செயல்படுத்தும் வகையிலான பார்வை வேண்டுமென்றால் ஒருவருக்கு நாட்டின் அரசியல் சட்டம் சரியாகத் தெரிந்திருக்க வேண்டும். இது ஹசாரேவிடம் சுத்தமாக இல்லை என்றார்.
இவரே தான் ஹசாரேவை 3 மாதங்களுக்கு முன். ஹசாரே ஒரு மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா என்றெல்லாம் புகழ்ந்திருந்தார்.
ஹசாராவே பாராட்டிய பலரும் அவரையும் அவரது குழுவினரையும் விமர்சிக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், அவர்களது வரிசையில் ஓம் பூரியும் சேர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications