டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து, குடும்பத்தினர் மீது மிரட்டல் வழக்கு
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் செல்லமுத்துவுக்கு எதிராக மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்களின் வீடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புப் போலீசார் கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். அதேபோல தேர்வாணைய அலுவலகத்திலும் 80 பேர் கொண்ட குழு தீவிர சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றின.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் இலுப்பையூர் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைவேலு செந்துறை என்பவர் செல்லமுத்துவுக்கு எதிராக போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
செல்லமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் எங்களுக்கு பூர்வீகமான இடத்தில் இருந்து எங்களை காலி செய்யும்படி மிரட்டி வருகின்றனர். அவ்வாறு காலி செய்யாவிட்டால் போலீசாரை விட்டு வழக்குப்பதிவு செய்து விடுவோம் என்று மிரட்டுகின்றனர் என்று அவர் தெரிவித்திருந்தார்.
தனது புகாரின்பேரில் செல்லமுத்துவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று நீதிபதி ஆறுமுகசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வழக்கறிஞர் ரியாஸ் கூறியதாவது,
குழந்தைவேலு கொடுத்த புகாரின்பேரில் செல்லமுத்து மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக செந்துறை காவல் நிலையத்தில் மிரட்டல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி வழக்கை பைசல் செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications