'அட்டாக்' பாண்டி உள்ளிட்ட நால்வரை குண்டர் சட்டத்தில் கைது செய்தது செல்லாது - மதுரை உயர்நீதிமன்றம்
மதுரை: 'அட்டாக்' பாண்டி உள்ளிட்ட நான்கு திமுகவினரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. அவர்களை கைது செய்தது சட்டவிரோதமானது என்றும் அது கூறியுள்ளது.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஏகப்பட்ட திமுகவினர் நில அபகரிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். பலர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மதுரையில் மட்டும் 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அவர்களில் முக்கியமானர்கள் எஸ்ஸார் கோபி, ஒச்சு பாலு, அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ் ஆகியோர்.
இந்த நிலையில் சமீபத்தில் பொட்டு சுரேஷ், திருவாரூர் திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் ஆகியோர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதில் சுரேஷ் வெளியே வந்து விட்டார். கலைவாணனை வேறு ஒரு வழக்கில் பிடித்து உள்ளே போட்டுள்ளனர்.
இந்தப் பின்னணியில் அட்டாக் பாண்டி, திருச்சியைச் சேர்ந்த குடமுருட்டி சேகர், ஒச்சுபாலு, குருசாமி ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தங்கள் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இவர்கள் நால்வரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்தது சட்டவிரோதம்,இது செல்லாது என்று இன்று அறிவித்து தீர்ப்பளித்தது.