தமிழக மீனவர்களுக்கு எதிரான கடலோர காவல்படைக்கு ஜெ. கண்டனம் - பிரதமருக்கு கடிதம்
சென்னை: தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிப்பதற்கான புதிய வரையறையை நிர்ணயித்த கடலோரக் காவல்படையைக் கண்டித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மாற்றுவதற்கு அறிவுறுத்தக் கோரியும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது :
இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு தருமாறு கோரி பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எல்லையில் மீன் பிடிக்க தடை
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ள கடலோரக் காவல் படை, தமிழக மீனவர்கள் கடல் எல்லையைக் கடந்து செல்வதாலும், இலங்கை அரசு தடை செய்துள்ள வலைகளைப் பயன்படு்த்துவதாலும்தான் இத்தகைய சம்பவங்கள் நடப்பதாகக் கூறியுள்ளது. மேலும் இந்திய - இலங்கை கடல் எல்லையில் இருந்து 5 கடல் மைல் தொலைவுக்கு மீன்பிடிக்க கூடாத மண்டலமாக அறிவித்து, அதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடலோரக் காவல் படை கருத்து தெரிவித்துள்ளது. இது நடைமுறைக்கு ஒத்துவராத, விபரீத விளைவை ஏற்படுத்தக் கூடிய, மூர்க்கத்தனமான நிலைப்பாடு ஆகும்.
பாக் நீரிணைப் பகுதியில் எல்லை வரம்பு இல்லாமல் தமிழக மீனவர்கள் காலம் காலமாக மீன்பிடித்து வருகிறார்கள் என்பதை தங்களிடம் 14.6.2011ல் நான் நேரில் அளித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். இதுகுறித்து இந்திய - இலங்கை அதிகாரிகளின் கூட்டு பணிக் குழு விவாதித்து வருகிறது என்றும் எனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டினி கிடக்க வேண்டும்
கடலோரக் காவல் படையின் நிலைப்பாட்டை அமல் செய்தால், தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதைக் கைவிட்டு பட்டினிதான் கிடக்க வேண்டும். இது மத்திய அரசின் எண்ணமாக இருக்காது என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்.
எனவே, நீதிமன்றத்தில் அளித்துள்ள அறிக்கையில் கூறிய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமாறு கடலோரக் காவல் படைக்கு தாங்கள் அறிவுறுத்த வேண்டும்," இவ்வாறு அந்த கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications