சென்னை வெள்ளப்பகுதிகளில் உணவுப்பொட்டலம் விநியோகம்- மேயர் துரைசாமி பார்வையிட்டார்
சென்னை: சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை மேயர் துரைசாமி பார்வையிட்டு உணவுப்பொட்டலங்களை வழங்கினார். பள்ளமான பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக வெளியேற்ற மேயர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் பெய்த தொடர் மழை காரணமாக நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனையடுத்து வெள்ள சேதப் பகுதிகளை உடனடியாக பார்வையிட்டு நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து மழையால் பாதிக்கப்பட்ட பெரம்பூர், கொளத்தூர், அயனாவரம் உள்ளிட்ட வெள்ளச் சேதப் பகுதிகளை மேயர் சைதை துரைசாமி கொட்டும் மழையில் பார்வையிட்டார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் பேசியதாவது:
முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை களையும் விதமாக தேங்கியுள்ள மழைநீரை அகற்றுதல், குப்பைகளை அகற்றுதல், பழுதடைந்த சாலைகளை தற்காலிகமாக சரிசெய்தல் மற்றும் மின்விளக்கு வசதி போன்ற குறைபாடுகளை களைதல் பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
சென்னை சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீரை இரவு, பகலாக 2 மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அயனாவரம் பகுதியில் ராகவன் தெரு, ஜமாலியா பூங்கா, உள்ளிட்ட மழையினால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தோம்.
ஞாயிறுக்கிழமை இரவு முதல் கிரீம்ஸ் சாலை, திடீர் நகர், மக்கீஸ் கார்டன், ரங்கூன் தெரு, கோடம்பாக்கம் தர்மபுரம், நுங்கம்பாக்கம் கங்கைகரைபுறம் ஆகிய பகுதிகளில் உள்ள மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகிறது. இதுவரை 20 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு மேயர் சைதை துரைசாமி கூறினார்.