பணிகளில் தலையிடுவதாக தென்காசி நகராட்சித் தலைவரின் கணவர் மீது கவுன்சிலர்கள் புகார்
தென்காசி: தென்காசியில் நகராட்சி தலைவர் பானுவின் கணவர் நகராட்சி அலுவலக பணியில் குறுக்கிடுவதாக கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர் அரசு வாகனங்களை முறைகேடாக பயன்படுத்துவதாகவும் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தென்காசி நகராட்சியில் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட பானு வெற்றி பெற்று நகராட்சி தலைவராக பதவியேற்றுக்கொண்டார். இவரது கணவர் ஜமீம் அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
இவர் நகராட்சி அலுவலகங்களில் விதிக்கு புறம்பாக தன்னிச்சையாக நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வருவதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
முகம்மது மைதீன் (எ) ராசப்பா, சங்கர சுப்பிமணியன், செய்யது ஆஸ், வெங்கட்ராமன், முகைதீன் அப்துல்காதர், நாகூர்மீரான், மாரிசெல்வி, ரகுமத்துல்லா ஆகிய கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது:
நகராட்சி தலைவரின் கணவர் ஜமீம், மன்ற கூட்டத்தை கூட்ட விடாமல் தடுக்கிறார். மேலும் கவுன்சிலர்களை ஆலோசிக்காமல் நகராட்சி தலைவரை செயல்பட தூண்டுகிறார். அரசு வாகனங்களை முறைகேடாகவும் பயன்படுத்தி வருகிறார்.
எனவே நகராட்சி கூட்டத்திலும், நகராட்சி பணியிலும் நகராட்சி தலைவர் பானுவின் கணவர் தலையிடக்கூடாது. அப்படி தலையிட்டால் அவர்மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மனுவை பெற்றுக் கொண்ட கமிஷனர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறவே அனைத்து கவுன்சிலர்களும் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications