அதிமுக அரசின் அராஜக போக்கை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டம்: தேதி மாற்றம்
மதுரை: விலைவாசி உயர்வைக் கண்டித்து திமுக வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதியில் இருந்து 4ம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன கூட்டம் நடத்தவிருக்கிறது.
இது குறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 மாதத்தில் முன்னறிவிப்பு ஏதுமின்றி பல ஆயிரம் கோடிக்கு மேலான வரிச்சுமையை தமிழக மக்கள் மீது அரசு சுமத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று இரவோடு இரவாக பஸ் கட்டணத்தையும், பால் விலையையும் வரலாறு காணாத அளவிற்கு பல மடங்கு உயர்த்தியுள்ளது. இது மக்களின் வாழ்க்கையையே கேள்வி குறியாக்கியுள்ளது.
தமிழக அரசின் அரஜாக போக்கை கண்டித்து டிசம்பர் 1ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், திமுக சார்பில் கண்டன பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று திமுக கழக பொதுச் செயலாளர் அறிவித்திருந்தார்.
ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கண்டன பொதுக் கூட்டம் டிசம்பர் 1ம் தேதிக்கு பதிலாக 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை உள்ள நான்கு நாட்களில் ஒரு நாளில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன கூட்டங்களை நடத்தலாம்.
5ம் தேதி முதல் 12ம் தேதி வரை உள்ள 1 வாரத்துக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகங்களின் சார்பில் தெருமுனை பிரசாரங்கள், பொதுக் கூட்டங்களை நடத்தலாம். அறிவிக்கப்பட்ட பேச்சாளர்களுக்கு புதிதாக கூட்டம் ஏற்பாடு செய்யப்படும் தேதியை மாவட்ட செயலாளர்கள் உடனே தெரிவிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications