சில வார ஓய்வுக்காக நாளை கொடநாடு கிளம்புகிறார் ஜெயலலிதா
கடந்த சில வாரங்களாகவே முதல்வர் ஜெயலலிதா படு பிசியாக உள்ளார். பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்காக நான்கு நாட்கள் அவர் இரண்டு கட்டமாக ஆஜராகி வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க நேரிட்டது.
மேலும் பஸ் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளிலும் அவர் உழல நேரிட்டது.
சட்டசபைத் தேர்தல் முடிந்து முதல் பணிப்பளு அதிகரித்திருந்ததால் தற்போது ஓய்வுக்காக சில வாரங்கள் அவர் கொடநாடு செல்கிறார். நாளை அவர் கொடநாடு கிளம்பிப் போகிறார். அங்குசில வாரங்கள் தங்கியிருப்பார். அங்கிருந்தபடியே அவர் அரசுப் பணிகளை மேற்கொள்வார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலாவும் உடன் செல்கிறார்.
ஆளுநரை சந்தித்தார்
இந்த நிலையில் இன்று மாலை ஆளுநர் ரோசய்யாவை சந்தித்துப் பேசினார் ஜெயலலிதா. 25 நிமிடம் நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று ஆளுநர் மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
கொடநாடு செல்லவுள்ளதால் ஆளுநரை சந்தித்து தான் அங்கிருந்து பணியாற்றப் போவது குறித்து ஆளுநரிடம் ஜெயலலிதா பேசியிருக்கலாம் என்று தெரிகிறது.