ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் வெற்றி ரத்தாகுமா?-டிசம்பர் 7ல் தெரியும்
சென்னை: ரிஷிவந்தியத்தில் தான் பெற்ற வெற்றியை ரத்து செய்யக் கோரும் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் வரும் டிசம்பர் 7ம் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் அவரது வெற்றியை எதிர்த்து மூர்த்தி என்பவரின் மனைவி ஜெயந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நான் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தேன். சில காரணங்களைக் கூறி அதிகாரிகள் எனது வேட்புமனுவை தள்ளுபடி செய்தனர். அதிகாரிகளின் தவறால் என்னால் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது. எனவே, விஜயகாந்தின் வெற்றியை செல்லாது என்று அறிவித்து அங்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி கே.வெங்கட்ராமன் விசாரித்து வருகிறார். இதில் விஜயகாந்தும் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
அதிகாரிகளால் ஜெயந்தியின் வேட்புமனு தள்ளுபடி ஆனதற்கும், நான் பெற்ற வெற்றிக்கும் தொடர்பு இல்லை. எனவே, எனது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவர் அதில் கூறியுள்ளார்.
இதற்கு ஜெயந்தி பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி வழக்கின் தீர்ப்பு வரும் டிசம்பர் மாதம் 7ம் தேதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.












Click it and Unblock the Notifications