மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணி வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: தமிழக அரசு பணிநீக்கம் செய்த மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திமுக ஆட்சிக்காலத்தில் பணி அமர்த்தப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேரை கடந்த சில வாரங்களுக்கு திடீர் பணி நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் அரசின் உத்தரவிற்கு இடைக்கால தடை வழங்கியது. பின்னர் மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி வழங்கவேண்டும் என்று சிறப்பு நீதிபதி சுகுணா உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல் முறையீட்டு மனுவை கடந்த 23ம் தேதி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உச்ச நீதிமன்றம் உத்தரவு
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு செவ்வாய்கிழமையன்ற நீதிபதிகள் டி.கே. ஜெயின், ஏ.ஆர்.தவே ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் குருகிருஷ்ணா, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை அவசர மனுவாக ஏற்று விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அந்தி அர்ஜூனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். 5 ஆண்டுக்கு ஒருமுறை தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம் மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்? பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் அனைவரையும் உடனடியாக மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
நீதிபதிகள் கண்டனம்
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழ் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா? சட்டப்படிதான் ஆட்சி நடைபெற வேண்டும்'' என்று கேட்டு கண்டனம் தெரிவித்தனர்.கடந்த 5 ஆண்டுக்கு முன்பு மக்கள் நலப்பணியாளர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர். அடுத்து வந்த ஆட்சி அவர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அவர்களை வேலையில் சேர்க்கப்பதும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதும், மீண்டும் அவர்களை பணி நீக்கம் செய்வதும் ஏன்?
பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் அனைவரையும் மீண்டும் வேலையில் சேர்க்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன், இந்த மேல்முறையீட்டு மனுவை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications