முல்லைப் பெரியாறு அணையை காக்க பலகட்ட போராட்டத்துக்கு தயாராகும் வைகோ!
சென்னை: முல்லைப் பெரியாறு அணையைக் காக்க வரும் 7ம் தேதி பிரசாரப் பயணம், 8ம் தேதி உண்ணாவிரதம் மற்றும் 21ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான பென்னிக்கு கட்டிய முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் கச்சை கட்டிக்கொண்டு பல்வேறு அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் நாம், எல்லை மீறிய பொறுமையை கடைபிடித்து வருகிறோம்.
குட்டக் குட்டக் குனியும் நிலைக்கு நாம் ஆளாகிவிடக் கூடாது. நமக்கு உரிமையுள்ள முல்லைப் பெரியாறு அணையின் வலிமை குறித்தும், உண்மை நிலை குறித்தும் தமிழ் நாட்டின் பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர்கள் தயாரித்துள்ள குறுந்தட்டுகள் தமிழகம் முழுவதிலும் விநியோகிக்கப்பட வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையைக் காக்கும் பிரச்சாரப் பயணத்தை நானும், முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கம்பம் அப்பாஸ் அவர்களும் டிசம்பர் 7ம் தேதி மதுரையில் இருந்து கூடலூர் வரை மேற்கொள்கிறோம். டிசம்பர் 8ம் தேதி அன்று முல்லைப் பெரியாறைக் காக்க கம்பம் நகரில் என்னுடைய தலைமையில், கம்பம் அப்பாஸ் முன்னிலையில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும். பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடங்கி வைப்பார். விவசாய சங்கத் தலைவர்களும், பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் போராட்டத்தை ஆதரித்துப் பேசுவார்கள். பழ.நெடுமாறன் உண்ணாவிரதத்தை நிறைவு செய்வார்.
கேரளம் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்துகின்ற முற்றுகைப் போராட்டம் ஜனவரி 21ம் தேதி நடத்துவதாக திருச்சியில் அறிவித்து இருந்தோம். தற்போது அந்தப் போராட்டம் டிசம்பர் 21ம் தேதி நடைபெறும் என்றும், 2010ம் ஆண்டு நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற கட்சிகள், அமைப்புகள் அனைவரும் இப்போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும், தமிழ் நாட்டின் உரிமையைக் காக்க இந்தப் போராட்டங்களுக்கு விவசாயிகளும் அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.