நாளை சென்னை வருகிறார் கனிமொழி-பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு
சென்னை: திஹார் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையாகியுள்ள திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி நாளை பிற்பகலில் சென்னை வருகிறார். அவருக்கு தடபுடலாக வரவேற்பு அளிக்க திமுகவினர் திரண்டு வருகின்றனர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ளார் கனிமொழி. இந்த வழக்கில் கைதான அவர் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக திஹார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் சமீபத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் டெல்லியில் உள்ள தனது அண்ணனும் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி வீட்டில் தங்கியுள்ளார். இந்தநிலையில் நாளை அவர் சென்னை வருகிறார்.
நாளை காலை 9.20ம மணிக்கு ஜெட் ஏர்வேஸ் வி்மானத்தில் புறப்பட்டு பிற்பகல் 12 மணியளவில் சென்னை வந்து சேருகிறார். இத்தகவலை திமுக எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னை வரும் கனிமொழிக்கு விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க திமுகவினர் தயாராகி வருகின்றனர்.