திருநங்கைகளின் நலனுக்காக தனது சம்பளத்தை கொடுத்த அதிமுக எம்.எல்.ஏ. காமராஜ்
கரூர்: கிருஷ்ணராயபுரம் அதிமுக எம்.எல்.ஏ. காமராஜ் தனது சம்பளத் தொகையான ரூ.50,000 ரொக்கத்தை திருநங்கைகளுக்கு வழங்கினார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற (தனி) தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. காமராஜ். அவரது மாத சம்பளம் ரூ.50,000. அதை அவர் ஒவ்வொரு மாதமும் விபத்தில் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அதிமுக மூத்த உறுப்பினர்கள் ஆகியோருக்கு வழங்கி வந்தார்.
இந்த நிலையில் தனது 6வது மாதச் சம்பளத்தை தனது தொகுதிக்குட்பட்ட மணவாசியில் வசிக்கும் 27 திருநங்கைகளின் நலனுக்காக வழங்கினார். சம்பளத்தை வழங்கிய அவர் திருநங்கைகளுடன் அமர்ந்து உணவு உண்டார்.
இந்த உதவியைப் பெற்றுக் கொண்ட திருநங்கைகள் தாங்கள் இருக்கும் குடிசைக்குப் பதில் வீடு கட்டித் தர வேண்டும் என்று எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளும், மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.