தலித்கள் நிலத்தையும், மக்கள் நிலத்தையும் ஆக்கிரமித்துள்ள ஜெ. மீது ஏன் எப்ஐஆர் இல்லை?- ஸ்டாலின்

முதல்வர் ஜெயலலிதா மீது நிலஅபரிப்பு வழக்கின் கீழ், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபியிடம் மனு கொடுத்துள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிஜிபி அலுவலகத்திற்கு இன்று அதிரடியாக வந்த ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சிறுதாவூரில் தலித்துக்களின் நிலத்தை, ஜெயலலிதா ஆக்கிரமித்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை டிஜிபியிடம் வலியுறுத்தியுள்ளேன். அதேபோல் நீலகிரி மாவட்டம் மலைப்பகுதியில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் பொதுமக்களுக்கான பாதையை மறித்து நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், அதன் மீது விசாரணை நடத்தி முதல் அமைச்சர் ஜெயலலிதா மீது நிலஅபகரிப்பு வழக்கின் கீழ், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் நான் புகார் கொடுத்துள்ளேன். நான் கொடுத்திருக்கக் கூடிய புகார் என்னவென்று கேட்டால், நிலஅபகரிப்பு என்று சொன்னால், கொடநாட்டை ஜெயலலிதா தனது பினாமி மூலமாக ஆக்கிரமித்துள்ளார். இதுதான் உண்மையான நிலஅபகரிப்பு.
இதேபோல சிறுதாவூர். தலித் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கக் கூடிய அந்தப் பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டு பினாமி பெயரிலே, அங்கேபோய் அடிக்கடி ஓய்வு எடுக்கிறாரே அம்மையார் ஜெயலலிதா அவர்கள். அதுதான் உள்ளபடியே நிலஅபரிப்பு. எனவே நான் இந்தப் புகாரை தருகிறேன். அவர் மீது ஏன் இன்னும் எப்ஐஆர் போடவில்லை. அவர் மீது உடனடியாக எப்ஐஆர் போட வேண்டும் என்றுதான் காவல்துறையிடம் என்னுடைய கோரிக்கையை எடுத்து வைத்திருக்கிறேன் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications