ஆசிரியர் நியமனத்திற்கு போட்டித் தேர்வு கூடாது - டாக்டர் ராமதாஸ்

இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது,
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் முதல் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வரை அனைவரும் போட்டித் தேர்வின் மூலமாகவே பணி அமர்த்தப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது மட்டுமின்றி இடைநிலை ஆசிரியர்களும் பட்டதாரி ஆசிரியர்களும் கூடுதலாக ஒரு தகுதி தேர்வையும் எழுத வேண்டும் என்று அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு சமூக நீதிக்கு எதிரானது. கிராமப்புறங்களைச் சேர்ந்த பட்டதாரிகளை பாதிக்கும் வகையில் இப்படி ஒரு முடிவை தமிழக அரசு எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசின் இந்த முடிவு பல்கலை கழகங்களால் நடத்தப்படும் தேர்வுகளின் தரத்தை சந்தேகிப்பதாக அமைந்துவிடும். அதுமட்டுமின்றி போட்டித் தேர்வுகளை நடத்துவது பல்வேறு முறைகேடுகளுக்கு வழி வகுக்கும். பணம் இருந்தால் ஆசிரியர் பணியை பெற்றுவிடலாம் என்ற நிலையை ஏற்படுத்திவிடும்.
எனவே ஏழை மற்றும் கிராமப்புற பட்டதாரிகளின் நலனை கருத்தில் கொண்டு, ஏற்கெனவே இருந்தவாறு வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications