கூடங்குளத்தில் மின் உற்பத்தியை உடனே துவங்க கோரி டிச. 20ல் கொடிசியா நிர்வாகிகள் உண்ணாவிரதம்

கோவை கொடிசியா அலுவலகத்தில், கோவை மாவட்ட சிறுகுறு தொழில் சங்க (கொடிசியா) தலைவர் கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது
தமிழகத்தில் தொழில்துறையில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை உள்ளது.
கோவை மாவட்டத்தில் பவுண்டரி, பம்பு செட், மோட்டார் உதிரிபாகங்கள், வெட்கிரைண்டர் மற்றும் அதன் உதிரிபாகங்கள் தயாரிப்பு போன்ற அனைத்து விதமான தொழில்களும் உள்ளன.
கோவையில் 30 க்கும் மேற்பட்ட சங்கங்கள் மூலம் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் மின்சாரம் என்பது அடிப்படையாக உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மின்சார பற்றாக்குறை இருந்து வருகின்றது.
தற்போது, ஒரு மாதமாக அறிவிக்கப்பட்ட மின்வெட்டை காட்டிலும் அறிவிக்கப்படாத மின் வெட்டு உள்ளது. கூடுதலாக பல மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. ஒரு நாளுக்கு சராசரியாக 8 முதல் 10 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. இதனால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்கினால் மட்டுமே மின்வெட்டு பிரச்னையை உடனடியாக தீர்க்க முடியும். கூடங்குளம் அணுமின் திட்ட பணிகள் முழுமையாக நிறைவடைந்து திறக்கவிருந்த நிலையில் சிலரது தூண்டுதலின்பேரில் அப் பகுதி மக்கள் நடத்தும் போராட்டம் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 3 அனல்மின் நிலையங்களும் பழுதாகியுள்ளது. இதனால் மின்தடை நேரம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதை ஈடுகட்ட கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே செயல்படுத்த வேண்டும்.
எனவே, கூடங்குளத்தில் மின் உற்பத்தியை உடனே துவங்க கோரி அனைத்து தொழில் அமைப்புகள் சார்பில் மாநிலம் முழுவதும் டிசம்பர் 20 ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் டிசம்பர் 20 ந் தேதி அன்று மூடப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications