'செக்ஸ் பவர்' பெறுவதற்காக பெண் புலியைக் கொன்ற வனபாதுகாவலர்
ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் வனபாதுகாவலர் ஒருவர் செக்ஸ் ரீதியாக கூடுதல் பலம் பெறுவதற்காக பெண் புலியைக் கொன்று அதன் பாகங்களை அறுத்து எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா மாவட்டத்தில் உள்ளது பொராம்தியோ வனவிலங்கு சரணாலயம். அங்கு வனபாதுகாவலாராக பணிபுரிந்தவர் வீர் சிங்(48). அவர் தனது தாது பலத்தை அதிகரிக்க சரணாலயத்தில் இருந்த 5 முதல் 6 வயது மதிக்கத்தக்க பெண் புலியைக் கொன்று அதன் உடல் பாகங்கள் சிலவற்றை அறுத்து எடுத்துக் கொண்டார்.
பெண் புலி இறந்தது யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் 15ம் தேதி வீர் சிங் நல்ல பிள்ளை போன்று காட்டில் சில உறுப்புகள் அறுக்கப்பட்ட நிலையில் பெண் புலியின் சடலம் கிடப்பதாக அதிகாரிகளுக்குத் தெரிவித்தார். இதையடுத்து வனத்துறை தலைமை பாதுகாவலர் பிரதாப் சிங் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் தான் வீர் சிங் சிக்கினார்.
விசாரணையின்போது அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.ஒரு விலங்கின் உடலில் விஷத்தை ஊசி மூலம் ஏற்றி அதை பெண் புலியின் பார்வையில் விட்டார் வீர்சிங். விஷம் ஏற்றப்பட்ட மிருகம் என்று தெரியாமல் அதை அடித்துக் கொன்ற பெண் புலி தானும் உயிரிழந்தது.
அதன் பிறகு வீர் சிங்கும், மேலும் 2 பேரும் சேர்ந்து புலியின் பாகங்களில் சிலவற்றை அறுத்து எடுத்துள்ளனர். அவர்கள் புலி நகம், மீசையை எடுத்துள்ளனர். புலியின் உடலில் இருந்த ராசி எலும்பை எடுக்க அதன் வயி்ற்றில் சுட்டுள்ளனர். இருப்பினும் அவர்களால் அந்த எலும்பை எடுக்க முடியவில்லை. இதை வைத்து மருந்து தயாரித்து தாது பலத்திற்காக அதை சாப்பிட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில்(2006-2010) இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 1,411ல் இருந்து 1,706 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் நம் நாட்டில் மாதம் 5 புலிகள் இறக்கின்றன அல்லது கொல்லப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.