சிவகாசி அருகே ஊரணியில் குளித்தபோது 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி
சிவகாசி: சிவகாசி அருகே ஊரணியில் குளித்த நான்கு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதேபோல கோவில்பட்டி அருகே 2 கல்லூரி மாணவிகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.
சிவகாசி அருகே உள்ள நேருஜி நகரைச் சேர்ந்த முத்துக்கருப்பசாமி, லோகநாதன், மாரீஸ்வரன் மற்றும் முத்துராமலிங்க நகரைச் சேர்ந்த அருண்குமார் ஆகிய நான்கு சிறுவர்களும், இன்று முஹர்ரத்தையொட்டி பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் ஏ.லட்சுமியாபுரத்தில் உள்ள ஊரணிக்குக் குளிக்கச் சென்றனர்.
அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென நான்கு பேரும் நீரில் மூழ்கியுள்ளனர். மூச்சுத் திணறி நான்கு பேரும் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நான்கு சிறுவர்களும் நீரில் மூழ்கி பலியான தகவலால் சிவகாசியே பெரும் சோகமடைந்துள்ளது.
கோவில்பட்டி குளத்தில் மூழ்கி 2 மாணவிகள் பலி
இதேபோல கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு கோனார்கோட்டை புதூரில் உள்ள குளத்தில் தனியார் கல்லூரியைச் சேர்ந்த சில மாணவிகள் குளிக்கச் சென்றனர். அப்போது 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இன்னொரு மாணவி உயிருடன் மீட்கப்பட்டார்.