வரதராஜ பெருமாள் கோவில் நிலத்தை அபகரித்ததாக பொன்முடி மீது புகார்
விழுப்புரம்: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி சூர்யா கல்வி நிறுவனத்திற்காக கீழக்கொந்தை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 1.58 சென்ட் நிலத்தை அபகரித்ததாக அவர் மீது விழுப்புரம் கலெக்டர் மற்றும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது ஏற்கனவே நில அபகரிப்பு வழக்குகள் உள்ளன. நில அபகரிப்பு வழக்கில் கைதாகி அவர் ஜாமீனில் விடுவிகக்ப்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் மீது மேலும் ஒரு நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டியைச் சேர்ந்த ரங்கநாத பட்டாச்சாரியாரின் மகள் ஆர். மல்லிகா விழுப்புரம் கலெக்டர் மற்றும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் பொன்முடி மற்றும் சூர்யா கல்வி நிறுவனத்தின் தலைவர்கள் மீது நில அபகரிப்பு புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது,
கீழக்கொந்தை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 1.58 சென்ட் நிலத்தை பொன்முடி சூர்யா கல்வி நிறுவனத்திற்காக அபகரித்துக் கொண்டார். கோவில் நிர்வாகியும், எனது சகோதரருமான சீனுவாசன் பட்டாச்சார்யார் பொன்முடி கொடுத்த தொல்லையால் மனமுடைந்து மனஉளைச்சலால் கடந்த 28-6-2008 அன்று இறந்தார். எனவே, இந்த விவகாரம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள், மனிதவளத்துறை அதிகாரி ஒருவர் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி மற்றும் கீழக்கொந்தையில் உள்ள 5 ஏக்கர் மற்றும் 92 சென்ட் நிலத்தின் மூலம் கோவிலுக்கு வருமானம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.