கள்ளத்தொடர்பு: அடங்காத மனைவியைக் கொன்று கணவன் தற்கொலை
நாமக்கல்: கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவியைக் குத்திக் கொலை செய்த கணவன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ளது ஆரியூர் நாடு கிராமம். அங்குள்ள பணஞ்சாட்டுபட்டியைச் சேர்ந்தவர் மணி (50). விவசாயி. அவரது மனைவி சரஸ்வதி (40). சரஸ்வதிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமிக்கும் (42) கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இது பற்றி தெரிய வந்த மணி தனது மனைவியக் கண்டித்துள்ளார். இருப்பினும் சரஸ்வதி தன் மனம் போன போக்கில் வாழ்ந்தார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு, அடிதடி என்று குடும்பத்தில் அமைதியே இல்லாமல் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்றிரவும் இந்த விவகாரம் தொடர்பாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி அடிதடியானது. தான் எவ்வளவு சொன்னாலும் கள்ளத்தொடர்பை விடாத மனைவி சரஸ்வதியை மணி வீட்டில் இருந்த பலாப்பழம் அறுக்கும் கத்தியால் குத்தினார். இதில் சரஸ்வதியின் குடல் சரிந்தது. அவரது முணங்கல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வாழவந்திநாடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது வீடு உட்புறமாக பூட்டியிருந்தது. கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். அடுத்த அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தார் மணி.
அந்த 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு மணியின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.