கேரளாவுடன் நடக்கும் பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு போகக் கூடாது- ராமதாஸ்
சென்னை: முல்லைப் பெரியாறு அணை வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துமாறு ஒருமுறை கூட கேரளாவை மத்திய அரசு கண்டித்ததில்லை. எனவே அப்படிப்பட்ட மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு போகக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர்க கூறுகையில், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இதுவரை ஒருமுறை கூட மத்திய அரசு, கேரளாவைக் கண்டித்ததில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், உத்தரவுகளையும் கடைப்பிடிக்குமாறு ஒருமுறை கூட அது கேட்டுக் கொண்டதில்லை, உத்தரவிட்டதில்லை.
எப்போதுமே அது தமிழகத்திற்குப் பாதகமாகவே செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், இரு மாநில அரசுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து தமிழகத்தையும் அழைத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலை என்ன என்பதை அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். மேலும், தமிழக அரசு இந்தப் பேச்சுவார்த்தைக்குப் போகக் கூடாது. இந்தப் பேச்சுவார்த்தையி்ல தமிழகம் கலந்து கொண்டால் அது கேரளாவுக்கு சாதகமாகி விடும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications